லஞ்சம் கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்கள்… மனைவியை சைக்கிளில் அழைத்து சென்ற கணவன்..


பஞ்சாப் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் லஞ்சம் கேட்டதால், காயமடைந்த பெண்ணை அவரது கணவர் சைக்கிளில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவலம் அரங்கேறி உள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து அடியோடு முடங்கியது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஊழியர்கள் லஞ்சம் கேட்டதால், அவரது கணவர் வேறு வழியில்லாமல் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

பாரத் நகர் பகுதியைச் சேர்ந்த தேவ்தத் ராம் என்பவரின் மனைவி கடந்த 20ம் தேதி தொழிற்சாலையில் வேலை செய்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி காலில் அடிபட்டது. பாரத் நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, மேல் சிகிச்சைக்காக கங்கன்வால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தேவ்தத் ராம் முடிவு செய்தார்.

இதற்காக ஆம்புலன்சை அழைத்தபோது, ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 2000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தேவ்தத், வேறு வழியில்லாமல், மனைவியை சைக்கிளில் வைத்தே 12 கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!