ஓட்டல் இடிந்து விழுந்து விபத்து – 69 மணி நேரத்துக்கு பிறகு ஒருவர் உயிருடன் மீட்பு


சீனாவில் கொரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்ட ஓட்டல் இடிந்து விழுந்து 69 மணி நேரத்துக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து ஒரு ஆண் உயிருடன் மீட்கப்பட்டார்.

சீனாவின் பீஜியான் மாகாணத்தின் குவான்சு நகரில் 5 மாடிகளை கொண்ட ஓட்டல் ஒன்று கொரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு, கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் அதில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த ஓட்டல் கடந்த 7-ந்தேதி இரவு திடீரென இடிந்து விழுந்தது. அதில் அங்கு தங்கியிருந்த 71 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து, சம்பவ இடத்தில் 100-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதில் 38 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதன்பின்னர் இடிபாடுகளில் சிக்கி மாயமானவர்களை மீட்கும் பணி இரவு பகல் பாராமல் தொடர்ந்தது. எனினும் அவர்களில் பலரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.


இந்த நிலையில் ஓட்டல் இடிந்து விழுந்து 69 மணி நேரத்துக்கு பிறகு அதாவது கிட்டத்தட்ட 3 நாட்களுக்கு பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடிபாடுகளில் இருந்து ஒரு ஆண் உயிருடன் மீட்கப்பட்டார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக விபத்து நடந்து 52 மணி நேரத்துக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 10 வயது சிறுவனும் அவனது தாயும் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கட்டிட இடிபாடுகளில் இருந்து நேற்று மேலும் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!