மனைவி இறந்த துக்கத்தில் மகன்களை கொன்று கணவர் தற்கொலை..!


மனைவி இறந்த துக்கத்தில் 2 மகன்களுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள அரியூர் கிராமம் பட்டத்தரசி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 42), டிரைவரான இவருக்கு இந்துமதி (35) என்ற மனைவியும், சுனில் (13), விமல் (9) என்ற 2 மகன்களும் இருந்தனர்.

இந்துமதிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. பல மருத்துவரிடம் காண்பித்தும் குணமாகவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு இந்துமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்துமதியின் இறப்பு சுந்தருக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் 2 மகன்களோடு சுந்தர் வாழ்க்கை நடத்தினார். ஆனாலும் மனைவியின் பிரிவால் சுந்தர் விரக்தியுடன் காணப்பட்டார்.

வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து போனால் மகன்கள் அனாதையாகி விடுவார்கள் என எண்ணிய அவர், மகன்களையும் கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி நேற்று இரவு வாழைப்பழத்தில் குருணை மருந்தை கலந்து 2 மகன்களுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார். சிறிது நேரத்தில் சுந்தர், மகன்கள் சுனில், விமல் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. பலமுறை தட்டியும் பலனில்லை. அதிர்ச்சியடைந்த அந்தப்பகுதி மக்கள் அலங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுந்தர் தனது மகன்களுடன் பிணமாக கிடந்தது தெரிந்தது.

3 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி இறந்த துக்கத்தில் மகன்களை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!