கனவுகளுடன் சென்னை வந்த இளைஞரின் உருகவைக்கும் கண்ணீர் கதை !


இயக்குநராகும் ஆசையில் சென்னை வந்த இளைஞர் சாலையோரம் கேட்பாரற்று கிடப்பதாகவும் அவருக்கு உதவுமாறும் முகநூல் புகைப்படத்துடன் தகவல் பரவியது. இதனையடுத்து சிலர் சென்னை வடபழனிக்கு விரைந்து அங்கு கிழிந்த உடைகள், சிக்குப் பிடித்த தலைமுடி, அழுக்கேறிய உடல் என அலங்கோலமாக காட்சி தந்த அந்த நபரை மீட்டு பராமரித்தனர். அவரிடம் பேசியப்போது தான் தெரிந்தது நடிகர் குணால், மோனல் நடித்து வெளிவந்த பார்வை ஒன்றே போதுமே என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்று.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த இவரின் உண்மையான பெயர் குருநாதன். உதவி இயக்குநராக இருந்த குருநாதன் அடுத்தடுத்து வாய்ப்புகளைத் தேடிச் சென்றபோதும் கிடைக்கவில்லை. தினசரி உணவுக்கு வயிற்றை அனுசரிக்க முடியாமல், கடைசியில் கைகொடுத்த வடபழனி சாலையோர பிளாட்பாரத்தில், பஞ்சம் தாளாமல் தஞ்சமடைந்தார். பல நேரங்களில் பசியால் தவித்த அவர் யாராவது கொடுக்கும் பணத்தை வைத்து வாழ்ந்து வந்துள்ளார். ஆனாலும் அவரது செயல் ஒன்று அனைவரையும் வியக்க வைத்தது. எங்கிருந்தோ பேனாவையும் பேப்பரையும் வாங்கி வைத்திருந்த அவர் எந்நேரமும் எழுதியபடியே இருந்துள்ளார்.

இவர் எழுதிக்கொண்டிருந்த போதுதான் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை இணையதளத்தில் சிலர் பகிர்ந்துள்ளனர். அவர் வைத்திருந்த பேப்பரில் கதைகளும் கவிதைகளும் இருந்ததைப் பார்த்த சிலர் இதுபற்றி அவரிடம் சென்று கேட்டபோது, தன் கதைகள் திருடப்பட்டதாகத் தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்துள்ளார். பின்னர் அவருக்கு உதவிய சிலர், அவருடன் படித்த அவரது ஊர்காரரான வேல்முருகன் என்பவரை தொடர்புகொள்ள, அவர் வந்து தனது நண்பரை மீட்டுள்ளார். ‘சினிமாவுக்கு போயிட்டான்.. எங்கயோ நல்லா வாழ்ந்துட்டு இருப்பானு நெனைச்சேன்’ என்று ஆதங்கத்துடன் கூறும் வேல்முருகன், ‘அவன் தன் கதையை திருடிட்டாங்கனு சொல்லிட்டே இருக்கான். எந்தத் துறையாக இருந்தாலும் சக மனிதரிடம் மனிதாபிமானத்துடன் நடந்துக்கங்க’ என்று பொதுவாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!