கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த 91 வயது நபர்


கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 91 வயது நிரம்பிய நபர் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து பூரண குணமாகியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.

சீனாவில் மட்டுமல்லாமல் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட 20-க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 636 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 31,161 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 4,800 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலை தடுக்க தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 91 வயது நிரம்பிய நபர் சிகிச்சை மூலம் வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமாகி உள்ளார்.

வாங் என்ற புனைப்பெயர் கொண்ட அந்த 91 வயது நிரம்பிய நபர் வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 23-ம் தேதி யூஷ்வங் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உரிய சிகிச்சை மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்ததையடுத்து வாங் இன்று வீடு திரும்பியதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தது குறித்து வாங் கூறுகையில், ‘வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து என் மீது மிகுந்த அக்கறையும், கவனிப்பும் செலுத்திய மருத்துவ ஊழியர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

சீனாவில் வயது நிரம்பியவர்கள் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகிவரும் நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அதிக வயது நிரம்பிய நபர் என்ற பெருமையை வாங் (91) பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!