வாளால் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடிய நடிகர் துனியா


கேக்கை வாளால் வெட்டியது குறித்து விளக்கம் அளிக்கும்படி கன்னட நடிகர் துனியா விஜய்க்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

கடந்த வருடம் ரவுடி பினு சென்னை அருகே அரிவாளால் கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது பல இடங்களில் இதுபோல் வாளால் பிறந்த நாள் கேக்கை வெட்டும் சம்பவங்கள் நடக்கின்றன. போலீசாரும் அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தற்போது கன்னட நடிகர் துனியா விஜய்யும் இதே சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் தனது பிறந்த நாளை பெங்களூரு ஹோசர ஹள்ளியில் உள்ள வீட்டில் கொண்டாடினார். ரசிகர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர் கையில் ஒரு பெரிய வாள் கொடுக்கப்பட்டது. அதை வைத்து பிறந்தநாள் கேக்கை வெட்டினார்.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரு கிரி நகர் போலீசாரும் வீடியோவை பார்த்தனர். இதையடுத்து கேக்கை வாளால் வெட்டி அச்சுறுத்தியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி துனியா விஜய்க்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். துனியா விஜய்க்கு நாகரத்தினா, கீர்த்தி என்ற 2 மனைவிகள் உள்ளனர்.

சமீபத்தில் மனைவிகளுக்குள் அடிதடி தகராறு ஏற்பட்டது. இதில் தன்னை தாக்கியதாக துனியா விஜய் மீது முதல் மனைவியின் மகள் போலீசில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!