உடலை எரித்துவிடவும்.. புதைக்க வேண்டாம் – தற்கொலை செய்த முதிய தம்பதி உருக்கமான கடிதம்..!


போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் புஷ்பா நகரில் வசித்து வந்தவர் மனோகரன் (வயது 66). இவரது மனைவி ஜீவா (62). இருவரும் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள்.

இவர்களது மகன் சரவணன், மகள் கார்த்திகா ஆகியோர் அதே பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். மனோகரனும், ஜீவாவும் மட்டும் தனியாக வீட்டில் தங்கி இருந்தனர்.

நேற்று இரவு மனோகரனின் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தபோது படுக்கை அறையில் மனோகரன் தீக்குளித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. அருகில் இருந்த மற்றொரு அறையில் ஜீவா பிணமாக கிடந்தார்.

இது குறித்து அய்யப்பன் தாங்கல் போலீசுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பிணமாக கிடந்த மனோகரன், ஜீவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனோகரன் தீக்குளித்த போது பற்றிய தீயால் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமாயின. அவரது மனைவி ஜீவா வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.


போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது ரூ. 2 லட்சம் நிரப்பப்பட்ட இரண்டு காசோலைகள் மற்றும் மனோகரன் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

நாங்கள் இறந்த பின்னர் எங்களது உடலை எரித்துவிடவும், புதைக்க வேண்டாம். ஈமச்சடங்கு மற்றும் காரிய நிகழ்ச்சிக்கு நான் கையெழுத்திட்ட காசோலையை பயன்படுத்திக் கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனோகரனின் சரவணன் மது போதைக்கு அடிமையானவர் என்று தெரிகிறது. அவர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கணவரை இழந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

மேலும் மகள் கார்த்திகாவுக்கு இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து ஆகியுள்ளது. தற்போது அவர் வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். மகன்-மகளின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியானதால் மனோகரனும், ஜீவாவும் மிகவும் கவலையில் இருந்தனர்.

இதற்கிடையே சரவணன் அடிக்கடி பணம் கேட்டு பெற்றோரிடம் தொந்தரவும் செய்து இருக்கிறார். இந்த மனவேதனையில் மனோகரனும் ஜீவாவும் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வயதான கணவன்- மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!