ஈழத்து போரில் மாயமான 20,000 தமிழரின் நிலை என்ன? இலங்கை அதிபர் ‘பகீர்’


இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காணாமல் போன, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்துவிட்டதாக, அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் போர்ச் சூழலில் பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்படுகின்றனர்.

போரில் வெற்றி பெருவோர், மாயமானவர்கள் குறித்து எந்த கருத்தும் கூறாமல், எப்போதும் மவுனமாகவே இருந்து வருகின்றனர். மாயமானவர்களின் உண்மை நிலை அறிய, பலரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்கள் ஒரு கட்டத்தில், ஐ.நா.,வின் பார்வைக்குச் செல்கையில், ஐ.நா., தன் பிரதிநிதிகள் மூலம் விசாரணையைத் துவக்கும்.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே, 30 ஆண்டுகளாக போர் நீடித்தது.

இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகினர். ‘மாயமானவர்கள் இலங்கைப் பாதுகாப்புப் படைகளிடம் உயிருடன் இருப்பர்’ என, உறவினர்கள் நம்புகின்றனர். ‘மாயமானவர்களின் உண்மை நிலை என்னவென்று அரசு அறிவிக்க வேண்டும்’ எனக் கூறி, உறவினர்களும் சில மனித உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால், இலங்கைப் பாதுகாப்புப் படையிடம் மாயமானவர்கள் உள்ளனர் என்பதை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், இலங்கைத் தலைநகர் கொழும்பில், ஐ.நா.,வின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் ஹானா சிங்கருடன், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சந்திப்பு நிகழ்ந்தது.

அதுகுறித்து இலங்கை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்த போரில் மாயமானவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாயமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். அவர்கள் போரில் இறந்துவிட்டனர்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.உள்நாட்டுப் போர் நடந்த சமயத்தில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை. இதனால், மனித உரிமை அமைப்புகளும், மாயமானவர்களின் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.-Source: dinamalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!