பேருந்தில் ஒய்யாரமாக பயணம் செய்த குதிரை – வைரலான புகைப்படம்..!


பிரிட்டனின் வேல்ஸ் நாட்டில், வீட்டிலிருந்து தப்பிய குதிரை ஒன்று அந்நகரத்தின் பேருந்தில் ஏறி பயணம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரிட்டனின் வேல்ஸ் நாட்டில் தலைநகரான கார்டிப் நகரின் சாலையில் குதிரை ஒன்று சுற்றித்திரிவதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் சம்பவத்தன்று காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்ட இடத்திற்கு, விலங்குகளை ஏற்றும் லாரியுடன் விரைந்தனர். இதற்கிடையே அப்பகுதியில் இருந்த சிலர் குதிரையை சிட்டி பஸ் ஒன்றில் ஏற்றினர். குதிரையை மீட்க, போலீசார் லாரியுடன் வருவார்கள் என்ற எண்ணத்தில் டிரைவரும் பஸ்சை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார்.

பஸ்சில் இருந்த பயணிகள் அந்த குதிரையை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றினர். இதையடுத்து போலீசார் வந்து குதிரையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அந்த சம்பவத்தை பார்த்த நபர் ஒருவர் கூறுகையில், ‘குதிரை வீறு நடைபோட்டு பேருந்தில் ஏறியது. குதிரை மீது சவாரி செய்வதை பார்த்தது உண்டு. ஆனால் குதிரை பஸ்சில் பயணம் செய்வதை இப்போதுதான் பார்க்கிறேன். இது புதிதாகவும் வினோதமாகவும் இருந்தது. குதிரையுடன் பலரும் செல்பி மற்றும் வீடியோக்கள் எடுத்துச் சென்றனர்’ என தெரிவித்தார்.

இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!