பிரிந்து சென்ற மனைவி.. எலும்புக்கூடாக மீட்கப்பட்ட கோவை என்ஜினீயர் – அதிர வைத்த காரணம்..!


கோவையில் கள்ளக்காதல் தகராறில் என்ஜினீயர் எரித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக இளம்பெண்ணின் கணவர் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கல்லுகுழியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு விதவை பெண்ணான அழகுமணி என்பரை காதலித்து திருமணம் செய்து இருந்தார். அழகுமணிக்கு முதல் கணவர் மூலமாக ஒரு மகள் உள்ளார்.

சக்திவேல் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விலகி கோவையில் பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் சக்திவேலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர் பிரிந்து சென்று விட்டார்.

மனைவி பிரிந்து சென்றதால் சக்திவேல் மட்டும் தனியாக வசித்து வந்தார். உறவினர்கள் யாருடனும் தொடர்பு வைத்துக்கொள்ளாத அவர் நெல்லையில் உள்ள தனது அக்காவிடம் மட்டும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார்.

கடந்த 6 மாதங்களாக சக்திவேல் அவரது அக்காவிடம் பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தனது மகன் தினேஷை கோவைக்கு அனுப்பி வைத்தார்.கோவைக்கு வந்த தினேஷ் சக்திவேலின் வீட்டிற்கு சென்றார். அப்போது கதவு திறந்த நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தினேஷ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டிற்குள் சக்திவேல் உடல் தீயில் எரிந்த நிலையில் எலும்பு கூடாக கிடப்பதாக கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் தினேஷ் இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து சக்திவேலின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது சக்திவேல் இறந்து 2 மாதங்களுக்கு மேல் இருக்கலாம் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் சக்திவேலின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சக்திவேலுக்கு அருகே வசித்து வந்த ஒரு இளம்பெண்ணுடம் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் சக்திவேலை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எனவே சக்திவேல் கள்ளக்காதல் விவகாரத்தில் எரித்து கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீசார் இளம்பெண்ணின் கணவர் உள்பட 5 பேரை பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!