பதக்கத்தை வாங்க மறுத்த மாணவி.. பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு..!


புதுச்சேரி பட்டமளிப்பு விழாவில் தான் ஹிஜாப் அணிந்ததற்காக அனுமதிக்க மறுத்ததால் பதக்கத்தை வாங்க மறுத்த மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி விமானநிலையம் வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சில மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பட்டமளிப்பு விழாவில் 205 ஆராய்ச்சி மாணவர்களுக்கு (131 ஆண் மற்றும் 74 பெண்), பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு (பிஎச்.டி/முதுகலை/இளங்கலை பட்டம்) 117 தங்கப் பதக்கங்கள் (35 ஆண் மற்றும் 82 பெண்) வழங்கப்பட்டன.

மொத்தமாக தற்போது 322 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மொத்தம் 19,289 மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன. அதில் 15,020 முழுநேர கல்வி மாணவர்கள் மற்றும் 4,269 தொலைதூர கல்வி மாணவர்கள் தங்கள் பட்டங்களைப் பெற்றனர்.

பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கு முன்னதாக, விழாவிற்கு வந்த சந்தேகப்படும் வகையில் இருந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவியை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியே அழைத்து விசாரித்து மாணவரை உள்ளே அனுப்பினார்கள்.

விழாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கேரள மாணவி ரபிஹாவை அவரது தலையில் அணிந்து வந்த ஹீஜாப்பை பாதுகாப்பு அதிகாரிகள் அகற்ற கூறியுள்ளனர். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவர் வெளியேற்றப்பட்டார்.

இவர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்றவர். ஜனாதிபதி புறப்பட்டு சென்ற பின்னரே அந்த மாணவி உள்ளே அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து மாணவி ரபிஹாவுக்கு பட்டம் வழங்கபட்டது ஆனால் மாணவி தனக்கு வழங்கிய பதக்கத்தை வாங்க மறுத்து திருப்பி கொடுத்தார். தான் ஹிஜாப் அணிந்ததற்காக அனுமதிக்கப்படாததால் பதக்கத்தை திருப்பி கொடுத்துள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!