‘ஷூ’வுக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவி.!


தேனி அருகே கோடாங்கிபட்டியில் ‘ஷூ’வுக்குள் பாம்பு பதுங்கி இருந்ததை மாணவி முன்கூட்டியே கவனித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள்.

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகள் அவந்திகா (வயது 9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவந்திகா தனது ‘ஷூ’ வை வீட்டுக்கு வெளியே கழற்றி போட்டிருந்தாள். நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக அவள் தனது புத்தக பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

அதன்பிறகு அவசர, அவசரமாக தனது ‘ஷூ’வை எடுத்து காலில் மாட்ட முயன்றாள். அப்போது ‘ஷூ’வுக்குள் ஏதோ இருப்பதை உணர்ந்தாள். அதனால் அவள் ‘ஷூ’வை அணியாமல் அதன் உள்ளே பார்த்தபோது அதில் ஒரு பாம்பு சுருண்ட நிலையில் பதுங்கி இருந்தது. இதைப் பார்த்து அபயகுரல் எழுப்பிய அவந்திகா, உடனே அந்த ‘ஷூ’வை கீழே வீசினாள். மேலும் இதுகுறித்து அவள் தனது பெற்றோரிடம் தெரிவித்தாள்.

பின்னர் அவளது பெற்றோர், பாம்பு பதுங்கியிருந்த ‘ஷூ’வின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து மூடினர். மேலும் இதுகுறித்து பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவர், ‘ஷூ’வுக்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பை அவர் தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் கொண்டுப்போய் விட்டார். பாம்பு பதுங்கி இருந்ததை முன்கூட்டியே கவனித்ததால் அதிர்ஷ்டவசமாக அந்த மாணவி உயிர் தப்பினாள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!