வீட்டில் தனித்திருந்த கணவன்-மனைவி ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு.. அதிர்ச்சி தகவல்..!


திருப்பூர் அவினாசி பாளையம் அருகே உள்ள நாச்சிபாளையம் நத்தகாட்டுதோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 70). இவரது மனைவி தெய்வாத்தாள் (வயது 65). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் தங்களுக்கு சொந்தமான 7 ஏக்கர் தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டு தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே தங்கினர். நேற்று இரவும் கணவன்- மனைவி 2 பேரும் வழக்கம் போல் தூங்கினர்.

நள்ளிரவு 12 மணியளவில் இவர்களது வீட்டு கதவு திறந்தநிலையில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது தெய்வாத்தாள் வீட்டு வாசலிலும், முத்துக்குமாரசாமி வீட்டுக்குள்ளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது கணவன்-மனைவி 2 பேரும் உருட்டுக்கட்டையால் தாக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த பீரோக்கள் திறக்கப்படாத நிலையில் இருந்தது. அதோடு தெய்வாத்தாள் அணிந்திருந்த நகைகளும் அப்படியே இருந்தது. எனவே நகை-பணத்துக்காக இந்த கொலை நடக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு சொந்தமான 7 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்க யாராவது கூலிப்படையை ஏவி இவர்களை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் துப்பறியும் மோப்பநாயும் கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!