கழிவுநீர் தொட்டியினுள் சடலமாக கிடந்த 2 வயது குழந்தை.. கதறியழுத பெற்றோர்..!


2 வயது குழந்தை 10 அடி ஆழ கழிவு நீர் தொட்டியில் சடலமாக மிதந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கிராமம் சிவனாபுரம். இங்கு வசித்து வருபவர் சாமுண்டி. இவரது மகன் மெகினன்.. 2 வயது குழந்தை இவன்!

இவர்கள் வீட்டு பக்கத்தில் கழிப்பறையின் கழிவு நீர் செல்வதற்காக 10 அடி ஆழத்தில் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த கழிப்பறை பயன்பாட்டில் இல்லை. மேலும் அந்த தொட்டியில் அருகிலேயே ஏரியின் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது.

இந்த நிலையில் குழந்தை மெகினன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் அவனை காணவில்லை.. இதனால் பெற்றோர் அவனை பல இடங்களில் தேடி அலைந்தனர். அப்போதுதான், மூடப்படாத நிலையில் இருந்த அந்த கழிவுநீர் தொட்டியினுள் எட்டி பார்த்தனர்.

குழந்தை தண்ணீரில் மூழ்கியபடியே கிடந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவனை மீட்டு உடனடியாக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதைக்கேட்டு பெற்றோர் குழந்தையை கட்டிபிடித்து கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர். 10 அடி ஆழ தொட்டியில் குழந்தை சடலமாக கிடந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!