ஜெயலலிதா இறந்து 3 ஆண்டுகள் கடந்தும் நீங்காத மர்மம்!


தமிழகத்தை ஆறு முறை ஆட்சி செய்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவிற்கு இன்று மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி 24ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

25ஆம் தேதி காய்ச்சல் குறைந்திருப்பதாகவும், 29ஆம் தேதி மருத்துவமனையிலேயே தங்கி சில நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிக்கை வெளியானது. இதையடுத்து 30ஆம் தேதி லண்டனில் இருந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்தார். அப்போது மூச்சு விட சிரமமாக இருப்பதால் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் 5ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு வருகை புரிந்தது.

10ஆம் தேதி டெல்லி எய்ம்ஸில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணரும், 21ஆம் தேதி இதய சிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர்களும் வருகை புரிந்தனர். அதன்பிறகு டிசம்பர் 4ஆம் தேதி ஜெயலலிதாவின் இதய துடிப்பு நின்று விட்டதாகவும், உடல்நிலை மோசமடைந்திருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை காண ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட யாரையும் அனுமதிக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிசம்பர் 5ஆம் தேதி பிற்பகலில் உடல்நிலை மிகுந்த அபாயத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை வளாகம், கிரீம்ஸ் சாலை, கேரள, கர்நாடக மாநில எல்லைகள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.


அன்றைய தினம் மாலை ஜெயலலிதா இறந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதிமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அதிமுக கொடி முழுமையாக ஏற்றப்பட்டது. ஆனால் இரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 75 நாட்களாக சிகிச்சை அளித்தும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியவில்லை.

ஜெயலலிதாவின் மரணச் செய்தி கேட்டு தமிழகத்தில் நூற்றுக்கணக்கானோர் அதிர்ச்சியில் உயிரிழந்தனர். இவர் சிகிச்சை பெற்று வந்த போது புகைப்படமோ, வீடியோவோ எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சசிகலா புஷ்பா புகார் மனு அளித்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அதேசமயம் அவரது தோழி சசிகலா தான் ஏதோ செய்துவிட்டதாகவும் புகார்கள் கூறப்பட்டன. ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்பே இறந்துவிட்டதாகவும், அவரது உடல் எம்பாமிங் முறையில் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது. அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது, முகத்தில் இருந்த இரண்டு புள்ளிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் எதற்கும் பதில் இல்லை.


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன்மூலம் 150க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், போயஸ் கார்டன் வீட்டு பணியாளர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்ட பலர் விசாரிக்கப்பட்டனர். ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில் ஜெயலலிதா மரண விவகாரத்தில் உண்மையை மறைக்க அப்பல்லோ மருத்துவமனை முயற்சிப்பதாக விசாரணை ஆணையம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கிடையில் ஜெயலலிதா சிகிச்சையின் போது ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோவை அமமுகவை சேர்ந்த வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் அது உண்மையான வீடியோ இல்லை என்று கூறி பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த சூழலில் விசாரணை ஆணையத்தின் பணிகள் இன்னும் முழுமை பெறாமல் இருக்கின்றன. ஜெயலலிதா இறந்து 3 ஆண்டுகள் ஆகியும், அவரது மர்ம மரணத்தில் இருக்கும் முடிச்சுகள் மட்டும் இன்னும் அவிழவில்லை.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!