பாராளுமன்றத்தை ஒரு மாதத்திற்கு முடக்கி வைத்த கோத்தபய ராஜபக்சே..!


இலங்கையில் பாராளுமன்ற கூட்டத் தொடரை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைத்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார்.

இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். கடந்த 18-ந் தேதி, அவர் அதிபராக பதவி ஏற்றார்.

2 தமிழர்கள் உள்பட 16 பேர் அடங்கிய இடைக்கால மந்திரிசபையையும் நியமித்தார். பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும். மக்கள் நலனுக்காக அரசு செயல்படும் என கோத்தபயா தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இலங்கை பாராளுமன்றம் (டிசம்பர் 3) கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பராளுமன்ற கூட்டத் தொடரை ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று நள்ளிரவு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

‘இலங்கை பாராளுமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி கூடும். அரசியலமைப்பு விதிகளின் படி பாராளுமன்ற அமர்வை ஒத்தி வைக்க அதிபருக்கு அதிகாரம் உண்டு. வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் அதிபர் தனது தலைமையிலான புதிய அரசின் கொள்கைகளை குறித்து சிறப்புரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது’ என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!