ஏகாதசி விரதமும், சொர்க்க வாசல் திறப்பும் எதற்காக தெரியுமா..?


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

தமிழ் மாதங்களில் முக்கியம் வாய்ந்தது மார்கழி. ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணரே உபதேசித்து உள்ளார். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. அதிகாலையில் பஜனை பாடுவது, திருப்பாவை, திருவெண்பாவை பாடுவது, வீட்டின் முன்பு கலர் வண்ணத்தால் கோலம் போடுவது என்று சிறப்பாக இருக்கும்.

ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த வைகுண்ட ஏகாதசி அபூர்வமாக சில ஆண்டுகள் இரண்டு முறை வரும். கடந்த 2015ஆம் ஆண்டில் இரண்டு முறை வந்தது. அதுபோல், இந்த ஆண்டும் இரண்டு முறை வந்துள்ளது. கடந்த ஜனவரி 8ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆண்டுக்கு இரண்டு முறை சொர்க்க வாசல் திறப்பு வருவது நல்ல சகுனம் என்று கூறப்படுகிறது.


நாளை 29-ந் தேதி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதற்காக திருப்பதி பெருமாள் கோயில் முதல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வரை ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. இந்த ஆண்டு இரண்டு முறை சொர்க்க வாசல் திறப்பு வந்ததால் அடுத்த ஆண்டு இருக்காது என்று கூறப்படுகிறது.
எதற்காக சொர்க்க வாசல் திறப்பு:
விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, அவருடைய இருகாதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்கமுடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணு பகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது கைடபருடன் போர்செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.

“பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருணைகாட்ட வேண்டும்.” என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் அசுர சகோதரர்கள் பெற்றனர். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று அசுரர்கள் ஸ்ரீமந் நாராயணனிடம் கேட்டுக் கொண்டனர்.

“வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்குவாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும் போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்துசெய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். .அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

விரத மகிமை:
* ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடவேண்டும்

* ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.


* ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பட்டினியாக இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம் . ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம் .

* முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.

* ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை பாரணை என அழைக்கிறோம் .

* துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து பல்லில் படாமல் கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

* நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.

விரதம் இருப்பவர்கள் அனைத்து உடல் நலத்துடனும், ஆரோக்கியத்துடனும், சகல பாக்கியங்களும் பெறுவார்கள்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!