கேரளாவில் சொத்துக்காக 6 பேரை கொலை செய்த ஜோளி, தான் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்கு சயனைடு கொடுத்து கொலைக்கு ஒத்திகை பார்த்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கூடத்தாயி பகுதியை சேர்ந்தவர் ஜோளி. இவர் தனது கணவர் உள்பட குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்தார். கணவரின் சொத்துக்களை தான் அடைவதற்காகவும், கணவரின் உறவினர் ஒருவரை 2-வது திருமணம் செய்துகொள்வதற்காகவும் ஜோளி இந்த கொடூர செயலில் ஈடுபட்டார்.
கடந்த 12 ஆண்டுகளில் ஒருவர் பின் ஒருவராக யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் இந்த கொலை திட்டத்தை அவர் அரங்கேற்றி உள்ளார்.
ஆனால் உறவினர் ஒருவருக்கு இந்த மரணங்களில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ஜோளி கைது செய்யப்பட்டார். அவருக்கு சயனைடு கொடுத்து உதவிய மேத்யூ, பிரஜிகுமார் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் ஜோளிக்கு உதவியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உள்ளூர் நிர்வாகியான மனோஜ்குமார் என்பவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜோளி தனது கணவர் மற்றும் உறவினர்களை கொலை செய்த விதம் பற்றியும், அவர்களை எப்போது கொலை செய்தார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் விசாரணையின்போது ஜோளியின் கொடூர செயல்கள் பற்றி ஒவ்வொரு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தவண்ணம் உள்ளது.
தான் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்கு சயனைடு கொடுத்து கொலைக்கு ஜோளி ஒத்திகை பார்த்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதுபற்றி ஜோளியிடம் போலீசார் விசாரித்தபோது அந்த நாய்க்கு வெறிப்பிடித்ததால் வேறு வழியில்லாமல் விஷம் வைத்து கொன்றதாக கூறி உள்ளார்.
இதுபற்றிய உண்மையை கண்டறிய நாயின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதைத்தொடர்ந்து நாயின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு ஜோளியை அழைத்துச் சென்று அடையாளம் காட்ட செய்து உள்ளனர். நாயின் உடலை பிரேத பரிசோதனை முடிவில்தான் அந்த நாய்க்கு வெறிப்பிடித்திருந்ததா? என்பது தெரியவரும்.-Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!