திருமணம் செய்யாமல் தனிமையில் வசித்த ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்!


வீட்டில் தனியாக வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் திருவண்ணாமலை அருகே நிகழ்ந்துள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள முன்வாந்தங்கல் கிராமத்தில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை லூர்து மேரி. இவர் திருமணம் செய்து கொள்ளாமல் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது பாதுகாப்பிற்காக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இவரது உறவினர்கள் சிலர் வெளி மாநிலங்களிலும் வெளிநாட்டிலும் குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் நேற்று உறவினர் ஒருவர் லூர்து மேரியை பார்க்க வீட்டிற்கு வந்தபோது, கொடூரமான முறையில் லூர்து மேரி கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டை சோதனை இடுகையில், வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பணம், நகைகள் காணாமல் போனதும், பாதுகாப்பிற்காக இருந்த நாய் வீட்டின் பின்புறம் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

லூர்து மேரி குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரிக்கையில், அன்றாடம் அருகிலிருந்த மாதா கோவிலுக்குச் சென்று ஜெபம் செய்வதும், அதை சுற்றியுள்ள குழந்தைகளுக்கு பழங்கள், சாக்லெட்கள் என விரும்பியதை வாங்கி கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருப்பார் என தெரிவித்தனர். மேலும் அனைவருக்கும் உதவி செய்யும் குணம் படைத்தவர் என்றும் தெரிவித்தனர்.

கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.-Source: Times

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!