உக்ரைனில் 2 அமெரிக்க வீரர்களை சிறைபிடித்த ரஷிய படை!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 4-வது மாதத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். மேலும் உக்ரைன் ராணுவத்தில் வெளி நாடுகளை சேர்ந்தவர்களும் இணைந்து போரிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த 2 வீரர்களை ரஷிய படைகள் சிறைபிடித்துள்ளது.

அமெரிக்காவின் அலபாமாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களான அலெக்சாண்டர் ட்ருக், ஆன்டி ஹுயின் ஆகியோர் தன்னார்வப் போராளிகளாக உக்ரைனுக்கு சென்று ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வந்தனர். கடைசியாக கடந்த 8-ந்தேதி இருவரும் தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசினர். அதன்பிறகு அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை.

இதற்கிடையே 2 அமெரிக்க வீரர்களும், உக்ரைனின் கார்கிவ் அருகே இஸ்பிட்ஸ்கே பகுதியில் நடந்த சண்டையின்போது ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ரஷிய டெலிகிராம் சேனலில், கார்கிவ் அருகே இரண்டு அமெரிக்க படை வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதி செய்தது. ஆனால் மேற்கொண்டு எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. இதன்மூலம், உக்ரைன் போரில் முதல் முறையாக அமெரிக்க வீரர்கள் 2 பேர் ரஷியாவால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட வீரர்களை திரும்ப பெற தேவையான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொள்ள உள்ளது. சமீபத்தில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதியில் போர் கைதிகளாக பிடிக்கப்பட்டு 2 இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ஒரு மொராக்கோ வீரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!