முகநூலில் 50 பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறித்த நெல்லை வாலிபர்!

பேஸ்புக்கில் போலி ஐடி-க்களை உருவாக்கி 50 பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறித்த நெல்லை வாலிபர் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூவிடம் ஒரு புகார் அளித்தார்.

அதில் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்து மர்ம நபர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் வள்ளியூரை சேர்ந்த முத்துக்குமார்(வயது 29) என்பவர் போலி ஐடி-க்களை உருவாக்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரது செல்போன் எண்ணை வைத்து சோதனை செய்ததில் முத்துக்குமார் கேரளா மாநிலம் அந்தியூர்கோனம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சைபர் கிரைம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து அங்கு தங்கி இருந்து போலீசார் முத்துக்குமாரை தேடி வந்தனர். அப்போது அவர் அந்தியூர்கோனத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரை கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், முத்துக்குமார் கடந்த 10 ஆண்டுகளாக கேரளாவில் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

சமீப காலமாக பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பிளஸ்-2 வரை மட்டுமே படித்துள்ள முத்துக்குமார், தனது செல்போனில் நவீன ஆப்களை டவுன்லோடு செய்து அதனை வைத்து அழகான பெண்களின் புகைப்படங்களை அவர்களது பேஸ்புக் கணக்கில் இருந்து டவுன்லோடு செய்துள்ளார்.

அதன்பின்னர் அவர்களை ஆபாசமாக சித்தரித்து அந்த பெண்களுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். கேரளாவை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட அழகான பெண்களின் புகைப்படங்களை அவர் ஆபாசமாக சித்தரித்துள்ளார்.

அதன்பின்னர் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பாமல் இருப்பதற்கு பணம் தரவேண்டும் என்றும் கேட்டு மிரட்டி உள்ளார்.

இதனை வெளியே சொல்லமுடியாமல் பல பெண்கள் பணம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!