வெளிநாட்டில் உயிரிழந்த தாய்.. தனியாக விமானத்தில் வந்த 11 மாத குழந்தை!

வெளிநாட்டில் தாய் உயிரிழந்தநிலையில் ஆதரவின்றி தவித்த 11 மாத குழந்தை விமானம் மூலம் திருச்சி அழைத்துவரப்பட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரி தெருவை சேர்ந்தவர் வேலவன்(38). இவரது மனைவி பாரதி (38). இவர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் முடிந்தநிலையில் இவர்களுக்கு 3 மகன்கள் பிறந்தனர். அதில் மூத்த மகன் ஏற்கனவே இறந்துவிட்டான்.

2-வது மகனுக்கு 7 வயது ஆகிறது. 3-வது மகன் தேவேஷ் பிறந்து 11 மாதங்கள் மட்டும் ஆகிறது. இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக பாரதி துபாய்க்கு வேலைக்கு சென்று, அங்கு ஒரு வீட்டில் வீட்டு வேலை பார்த்துவந்துள்ளார். சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த அவர், தனது 11 மாத மகனையும் உடன் அழைத்துசென்றுள்ளார்.
இந்நிலையில் பாரதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் 29- ஆம் தேதி பாரதி உயிரிழந்தார். அவருடைய உடல் துபாயில் அடக்கம் செய்யப்பட்டது. தாய் உயிரிழந்தநிலையில் அவரது 11 மாத குழந்தை ஆதரவின்றி தவித்துள்ளது.

குழந்தையை பாரதியின் தோழிகள் பராமரித்துவந்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக துபாயில் வசிக்கும் துபாய் தி.மு.க. அமைப்பாளர் எஸ்.எஸ்.முகமது மீரான் என்பவர் தமிழக முதல்வருக்கு தெரியப்படுத்தியுள்ளார். உடனே அதிரடி நடவடிக்கையில் இறங்கிய முதல்வர், குழந்தையை இந்தியா கொண்டுவர ஏற்பாடுகளை செய்துள்ளார்.

அதன்படி, நேற்று துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த திருவாரூரை சேர்ந்த சதீஷ் குமார் என்பவருடன் குழந்தை தேவேஷ் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் நேற்று மாலை திருச்சி விமான நிலையத்தில் குழந்தை தேவேஷ் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தாய்யை இழந்து ஆதரவின்றி தவித்த குழந்தை, தந்தையை பார்த்ததும் சிரித்து விளையாடிய காட்சிகள் அங்கிருந்தோரை கண்கலங்கவைத்தது.- source: spark * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!