பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் 3 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்.. பெற்றோர்களே எச்சரிக்கை..!


பண்ருட்டி அருகே பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் 3 வயது சிறுமி தவறிவிழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகாராஜா. விவசாயி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு அஷ்விதா (வயது 5), பவளவேணி (3), ரீபிகா (10 மாதம்) ஆகிய 3 பெண்குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் பிரியா தீபாவளி பண்டிகை கொண்டாட கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பண்டரக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். அதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மாலை பிரியா அவரது கணவர் மகாராஜா மற்றும் 3 குழந்தைகளுடன் பண்டரக்கோட்டைக்கு வந்தார். அங்கு அவர்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடினர்.

நேற்று மாலை பிரியாவின் தந்தை கண்ணனுக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு பிரியா தன் தந்தையை அழைத்து சென்றார். அப்போது தனது குழந்தைகளை அருகில் உள்ள உறவினர் செல்வியிடம் விட்டு விட்டு சென்றார்.

செல்வி வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி பவளவேணி தனியாக தன் பாட்டி வீட்டுக்கு நடந்து வந்தாள்.

அந்த பகுதியில் லட்சுமி என்பவர் புதியதாக வீடுகட்டி வருகிறார் இதற்காக மணல் எடுக்க அங்கு 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. நேற்று பெய்த மழையினால் அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்றது.

நடந்து வந்த சிறுமி பவளவேணி தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்தாள். சிறிது நேரத்தில் மூச்சு திணறி பரிதாபமாக இறந்துவிட்டாள்.

இரவு 7 மணி அளவில் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்த பிரியா வீட்டிற்கு வந்தார். குழந்தையை உறவினர் வீட்டில் தேடிபார்த்தார். அங்கு இல்லை.

அப்போது பள்ளம் தோண்டப்பட்டு தேங்கி இருந்த தண்ணீரில் பவளவேணி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பத்தினர் திரண்டு வந்தனர்.

பின்பு அவர்கள் சிறுமி பவளவேணியின் உடலை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் புதுபேட்டை போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் தவறிவிழுந்து சிறுமி இறந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!