“ஜெயலலிதா ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்


ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் பேசி வருகிறார். ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதியும், அவருடைய மகன் ஸ்டாலினும் போட்ட பொது வழக்கு தான் காரணம். இவர்கள் பொய் வழக்கு போட்டு, அவர் சிறை சென்றதால் தான் மனஉளைச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். ஆனால், இன்று மக்களை ஏமாற்ற ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். இன்று நாம் தான் தாயை இழந்த பிள்ளைகள் போல் தவித்து வருகிறோம். ஜெயலலிதா ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது. ஜெயலலிதா மறைவுக்கு ப.சிதம்பரமும் ஒரு காரணம். ஏனென்றால் அவர் ஜெயலலிதா தண்டனை பெறுவதற்கு பொய்யான தகவலை கொடுத்தார். இன்று ஜெயலலிதா ஆன்மா அவரை சும்மா விட்டதா? ப.சிதம்பரம் சிறையில் இருக்கிறார்.

ஜெயலலிதா குறித்து கனிமொழி வசை பாடி வருகிறார். அவரும் திகார் சிறையில் அடைபட்டு கிடந்தார். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தால் அவரது ஆன்மா சும்மா விடாது. ஸ்டாலின் விஷமத்தனமான பிரசாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்களிடம் தவறான பிரசாரத்தை பரப்பி, அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கருணாநிதி 2 ஆண்டுகளாக வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருந்தார். யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. தகப்பனாருக்கே வஞ்சகம் விளைத்த ஸ்டாலின், ஜெயலலிதா மறைவு குறித்து பேசி வருகிறார்.

122 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதாகவும், ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும் ஸ்டாலின் கூறி வந்தார். ஆனால் அவரது கனவு ஒருபோதும் பலிக்கவில்லை. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தபோது தி.மு.க.வினர் மேஜை மீது ஏறி நின்று நடனமாடினார்கள். ரவுடித்தனம் செய்யும் கட்சியான தி.மு.க. என்பதை சட்டமன்றத்தில் நிரூபித்து விட்டனர். இந்த ரவுடிகளை ஆட்சியில் அமர்த்தினால் இந்த நாடு தாங்குமா? பெரும்பான்மையை நிரூபித்த பிறகு வெளியில் வந்த ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு வந்தார். இவை அனைத்தும் அவரது சுயநலம், பதவி வெறி ஆகும்.

அ.தி.மு.க.வை உடைக்க பார்த்தனர். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்தனர். ஆனால், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியவில்லை. அ.தி.மு.க.வில் ஒரு தொண்டனை கூட அவர்களால் வாங்க முடியாது. உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். நீங்கள் செய்த பாவம், அநியாயம் உங்களை பதவிக்கு வரவிடாது.

சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டதாக ஸ்டாலின் கூறி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார். இது உண்மைக்கு புறம்பான தகவல். இந்தியாவில் சட்டம்-ஒழுங்கை பேணி பாதுகாப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான விருதையும் நான் பெற்று உள்ளேன். இதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

கோவையில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் சூலூர் பகுதியை சேர்ந்த 3 தி.மு.க.வினர் ஒரு கர்ப்பிணி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றனர். இதுதொடர்பாக அவர் போலீசில் அளித்த புகாரின் பேரில், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். தி.மு.க. துணை செயலாளர் ஒருவர் அழகு நிலையத்துக்கு சென்று அங்கிருந்த பெண்ணை காலால் எட்டி உதைக்கும் காட்சியை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இப்படி தி.மு.க.வினர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சட்டம்-ஒழுங்கு பற்றி பேசுகிறார்கள்.

1989-ம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினர். அப்போது சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா இருந்தார். அவர் பேச எழுந்ததும், அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் ஜெயலலிதாவை தாக்கினார்கள். அவரது சேலையை பிடித்து இழுத்தனர். எனவே, பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை.

தி.மு.க.வினர் ஆட்சிக்கு வராவிட்டால் திண்ணைக்கு வருவார்கள். மக்களிடம் மனுக்கள் வாங்குவார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தால் மக்களை மறந்துவிட்டு தங்கள் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். பழி வாங்கும் கட்சி தி.மு.க. மட்டுமே. அது கட்சியாக அல்ல, கார்ப்பரேட் கம்பெனியாக செயல்பட்டு வருகிறது. அதன் இயக்குனராக ஸ்டாலின் இருக்கிறார். ஸ்டாலினின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!