விபத்தில் பரிதாபமாக பலியான 2 வாலிபர்கள் பற்றி வெளி வந்த உருக்கமான தகவல்கள்


தோவாளை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி பலியான 2 வாலிபர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாகர்கோவிலில் இருந்து 2 வாலிபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்மொழி நோக்கி வேகமாக சென்றனர். தோவாளையில் உள்ள அபாயகரமான வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 2 வாலிபர்களும் பரிதாபமாக இறந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

போலீஸ் விசாரணை

இச்சம்பவம் தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பலியானவர்களில் பார்வதிபுரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த லெட்சுமணன் (வயது 25) என்பது தெரியவந்தது. அவருடைய உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டது. மற்றொருவர் யார்? என்று தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பலியான மற்றொருவர் கட்டயன்விளையை சேர்ந்த விஜய் (17) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் நண்பர்களாக இருந்துள்ளனர். மோட்டார் சைக்கிளை லெட்சுமணன் ஓட்டியுள்ளார். ஆனால் நள்ளிரவு நேரத்தில் எதற்காக ஆரல்வாய்மொழி நோக்கி சென்றார்கள்? என்று தெரியவில்லை.

என்ஜினீயர்

விபத்தில் பலியான லெட்சுமணன் என்ஜினீயர் ஆவார். வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார். இன்னும் சில நாட்களில் வெளிநாடு செல்ல இருந்த நிலையில் அவர் விபத்தில் பலியாகி விட்டார். இந்த உருக்கமான தகவலை போலீசார் தெரிவித் தனர். 2 பேரும் பலியானது அவர்களின் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த 2 பேரின் உடல்களையும் பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். இந்த காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு 2 பேருடைய உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!