புதுமாப்பிள்ளையை கடத்திச்சென்று கொடூரமாக வெட்டிக்கொன்ற மர்மகும்பல்..!


குளச்சல் அருகே புதுமாப்பிள்ளையை மர்ம கும்பல் கடத்திச்சென்று, வெட்டிக்கொலை செய்து விட்டு, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருங்கல் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மகன் டார்வின் ராஜா (வயது25). இவருக்கும், குளச்சல் அருகே குழவிளையை சேர்ந்த ராஜசேகர் மகள் அர்சயா ராஜிலின் (22) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.ராஜசேகர் குளச்சல் பஸ் நிலையத்தில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு டிராவல்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் அவதியடைந்தார்.

இதையடுத்து, மாமனாரின் நிறுவனத்தை புதுமாப்பிள்ளை டார்வின் ராஜா நடத்த தொடங்கினார். அதன்படி, நேற்று முன்தினம் காலையில் டார்வின்ராஜா வழக்கம் போல் நிறுவனத்திற்கு சென்றார்.

மதியம் மனைவி சாப்பிட வருமாறு செல்போனில் அழைத்தார். அப்போது, அவர் சாப்பிட வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

வெகுநேரமாகியும் அவர் வீடு வந்து சேரவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது, அவர் எடுத்து பேசவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த மனைவி, டார்வின் ராஜாவை தேடி டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சென்றார்.

அப்போது, அவர் நீண்ட நேரத்திற்கு முன்பே புறப்பட்டு சென்றதாக அங்கு இருந்தவர்கள் கூறினர். இதையடுத்து மாயமான டார்வின் ராஜாவை பல இடங்களில் தேடினர். ஆனால், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டார்வின் ராஜாவை தேடத்தொடங்கினர்.

அப்போது, நேற்று முன்தினம் இரவு குளச்சல் அருகே பாம்புரிவாய்கால், வெள்ளமணல் பகுதியில் ஒரு குளத்தின் கரையில் டார்வின் ராஜாவின் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.


அவரது செருப்பு அந்த பகுதியில் கிடந்தன. தொடர்ந்து, அவரை சுற்றும் முற்றும் தேடினர். ஆனால், அந்த பகுதி முழுவதும் இருட்டாக இருந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில், நேற்று காலையில் டார்வின் ராஜாவை தேடி அவரது உறவினர்கள் வெள்ளமணல் குளத்திற்கு சென்றனர். அங்கு குளக்கரையில் டார்வின்ராஜா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவரது உடலில் பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட காயம் இருந்தது. மேலும், அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம், பிரேஸ்லெட் என சுமார் 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

அவரை மர்ம கும்பல் கடத்தி சென்று கொடூரமாக வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மோப்ப நாய் ஓரா வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால், நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், டார்வின் ராஜா கொலைக்கான காரணம் என்ன? இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!