அப்பா இனி நீங்கள் வரவே மாட்டீர்களா..? ராணுவ வீரர் உடலுக்கு உணர்ச்சிமிகு அஞ்சலி செய்த மகள்..!


கடல் அலையில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு அவரது மகள் உணர்ச்சிமிகு அஞ்சலி செலுத்தினார்.

எத்தனை பணிகள் இருந்தாலும் ராணுவ பணி என்பது பெருமைமிக்க மிடுக்கான பணியாகும். ஆசையோடு சுமந்து பெற்ற தாய்-தந்தை, கட்டிய மனைவி, தொட்டில் குழந்தை என அனைத்து சொந்த பந்தங்களையும் தாண்டி தாய்நாட்டின் பாதுகாப்பே பிரதானம் என்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ராணுவ வீரர் களின் சேவை மகத்தானது.

அதேவேளை விபத்துகள், பயங்கரவாத தாக்குதல் என எதிர்பாராத சம்பவங்களில் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் உயிரிழப்பு கொடுமையானவை. என்னதான் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு நிதி உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு பதவி என்று அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டாலும் அந்த உயிரிழப்பை ஈடுசெய்வது கடினம். அந்த இழப்பு நீங்காத வடுவாக என்றுமே அக்குடும்பத்தினர் நெஞ்சினில் நிறைந்திருக்கும்.

அப்படி ஒரு சோக சம்பவம் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரருக்கு ஏற்பட்டது. அந்த வீரருக்கு அவரது செல்ல மகள் அஞ்சலி செலுத்திய அந்த நிகழ்வு அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்தது. அதன் விவரம் வருமாறு:-

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் எஸ்.செந்தில்குமார். ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற தனது கனவை ஈடுசெய்ய கடுமையாக உழைத்தார். அதன் பலனாக மத்திய துணை ராணுவ படையின் (சி.ஆர்.பி.எப்.) தலைமை காவலராக, அந்தமானில் பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் தனது சக நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்றார். ஆனால் அதுதான் தனது இறுதி தருணம் என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை. நண்பர்களுடன் கடலில் உற்சாகமாக அவர் விளையாடி கொண்டிருந்த சமயம், திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கினார். அவரை தேடும் முயற்சிகள் ஒருபுறம் தீவிரமாக்கப்பட, சில நிமிடங்களிலேயே அவரது உடல் கரை ஒதுங்கியது.

இதையடுத்து செந்தில்குமாரின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு அந்தமானில் இருந்து செந்தில்குமாரின் உடல் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இந்திய துணை ராணுவப்படை சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

ராணுவ உடையில் மிடுக்குடன் செந்தில்குமாரை பார்த்து இதுவரை பூரித்த அவரது குடும்பத்தினர், பேச்சு மூச்சற்று கிடக்கும் அவரது உடலை கண்டு உடைந்து போனார்கள். குறிப்பாக அவரது செல்ல மகளான ஸ்ரீதன்யா (வயது 14) தந்தையின் உடலை ‘அப்பா, இனி நீங்கள் வரவே மாட்டீர்களா?’ என்பது போல பார்த்தது அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்தது. ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை முடிந்த நேரத்தில் ஸ்ரீதன்யாவின் குரல் ஒலித்தது அனைவரையும் பார்க்க வைத்தது.

அழுது அழுது கண்ணீரே காணாமல் போன கண்களுடன் ‘பரேட் சவுதான்’ என்று ஸ்ரீதன்யா சொன்ன அந்த வார்த்தைக்கு, அங்கிருந்து துணை ராணுவ வீரர்களின் கால்கள் கட்டுப்பட்டன. அதனைத்தொடர்ந்து ‘பரேட் சல்யூட்’ என்று கூறி ஸ்ரீதன்யா சல்யூட் அடித்ததும் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

ராணுவ சீருடையில் இருக்கும் போது அழ கூடாது என்பது ராணுவ மரபாகும். ஆனால் அதையும் தாண்டி, தனது தந்தையின் உடலுக்கு ஸ்ரீதன்யாவின் இறுதி அஞ்சலி ராணுவ அதிகாரிகள், சக வீரர்களின் கண்களையும் குளமாக்கியது. தொடர்ந்து ராணுவ வீரரின் மகள் என்பதற்கேற்ப ‘பரேட் தம்’, ‘பரேட் லாக் அவுட்’ என்று அடுத்தடுத்த கட்டளைகளையும் தழுதழுத்த குரலில் சொல்லி முடித்தார், ஸ்ரீதன்யா.

அவ்வளவு நேரம் அழுகையை கட்டுப்படுத்தி வைத்திருந்த ஸ்ரீதன்யா, ஒருகட்டத்தில் ‘நைனா’ (தெலுங்கில் அப்பா) என்று கைகளை கூப்பி தரையில் அப்படியே விழுந்து அழ தொடங்கினார். அவரது அழுகை, கல் நெஞ்சத்தையும் கரைப்பதாக இருந்தது. இந்த சம்பவம் சென்னை விமான நிலைய வளாகத்தையே சோக கடலில் மூழ்கடித்தது.

தன்னை தேற்றிவிட வந்த உறவினர்களிடம், ‘என் அப்பா நேர்மையாக பணிபுரிந்தவர். அவரின் இடத்தை நான் நிரப்புவேன்’, என்று தழுதழுத்த குரலில் அவர் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து, செந்தில்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான வாணியம்பாடிக்கு காரில் எடுத்து செல்லப்பட்டது.

கடந்த ஆண்டு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் குண்டு பாய்ந்து தீபக் நெய்ன்வால் என்ற வீரர் வீரமரணம் அடைந்தார். டேராடூனில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, அவரின் 8 வயது மகள் அடக்க முடியாத அழுகையுடன் இறுதி அஞ்சலி செலுத்தியது பார்ப்போரை கலங்கடித்தது.

இப்போது தமிழக வீரரின் உடலுக்கு அவரது மகள் உணர்ச்சிமிகு அஞ்சலி செலுத்திய நிகழ்வு அனைவரது நெஞ்சத்தையும் உருக செய்வதாக அமைந்துவிட்டது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!