2ம் உலக போரில் ஈடுபட்ட விமானம் விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலி – அமெரிக்காவில் சோகம்..!


அமெரிக்காவில் 2ம் உலக போரில் ஈடுபட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவின் ஹார்ட்போர்டு விமான நிலையத்தில் இருந்து போயிங் பி-17 ரக விமானம் ஒன்று 13 பேருடன் புறப்பட்டு சென்றது. 2ம் உலக போரில் ஜெர்மனி படையினருக்கு எதிராக குண்டுகளை வீசும் பணியில் இந்த விமானம் சிறப்புடன் செயல்பட்டிருந்தது.

இந்த நிலையில், விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் திடீரென தரையிறங்க முயற்சித்துள்ளது. இதில் விமானம் விபத்திற்குள்ளாகி பிராட்லி சர்வதேச விமானத்தில் இருந்த பராமரிப்பு மையம் ஒன்றில் மோதியது.

இந்த விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். நிலப்பகுதியில் இருந்த ஒருவர் காயமடைந்து உள்ளார். விமானத்தில் 3 விமானிகள் மற்றும் 10 பயணிகள் இருந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கவர்னர் லேமண்ட் கூறியுள்ளார். இதனால் பரபரப்புடன் காணப்படும் அந்த விமான நிலையம் 3½ மணிநேரம் வரை மூடப்பட்டது. பின்னர் ஒற்றை ஓடுதளம் விமான சேவைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த விமானம் கடந்த 1987ம் ஆண்டு பிட்ஸ்பர்க் நகரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கியதில் பலர் காயமடைந்தனர். அதன்பின் சரி செய்யப்பட்டு மீண்டும் விமானம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருந்தது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!