17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து சீரழித்த வாலிபர்கள்… பெரம்பலூர் அருகே பரபரப்பு..!


பெரம்பலூர் அருகே 17 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து சீரழித்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகேயுள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நோய் வாய்ப்பட்ட தந்தை இறந்து விட்ட நிலையில் தாயின் பராமரிப்பில் சிறுமி வளர்ந்து வந்தார்.

போதிய வருவாய் இல்லாததால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் சூழ்நிலைக்கு சிறுமி தள்ளப்பட்டார். வயிற்று பிழைப்புக்காக அவரது தாயார் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைக்கு சென்று வந்தார். அப்போது சிறுமியை வீட்டில் தனியாக விட்டுச் சென்றுள்ளார்.

இதற்கிடையே அந்த சிறுமிக்கு கடந்த சனிக்கிழமை திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் கூறிய சிறுமியின் வீட்டார் அதற்கான ஏற்பாடுகளையும் ரகசியமாக செய்து வந்துள்ளனர். இதுபற்றிய தகவல் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அதிகாரி அருள்செல்வி மற்றும் குழுவினர் சிறுமியை மீட்டனர்.

பின்னர் அவரை அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் சட்ட சிக்கல்கள், உடல் நிலை பாதிப்பு போன்றவற்றை பக்குவமாக எடுத்துக் கூறினர். மேலும் சிறுமியின் மனநிலையை மாற்ற கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டது.

அப்போது மனம் திறந்த சிறுமி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இதனால் குழப்பமடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது அவர் அளித்த தகவல்கள் நெஞ்சை உறைய வைப்பதாக இருந்தது. பாடாலூர் அருகே உள்ள மங்கூன் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 25), பாபு (23) ஆகிய இருவரும் தாய் வேலைக்கு சென்றதும், தனது வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். அவர்கள் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி தனது தாயாருக்கும் சிறுமி தெரியப்படுத்தி இருக்கிறார்.

இனிமேலும் தனது மகளை வீட்டில் வைத்து பாதுகாப்பது சிரமம் என்று எண்ணிய சிறுமியின் தாய், அவருக்கு அவசரம் அவசரமாக திருமண ஏற்பாடுகளை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் இது பற்றி சமூக நலத்துறை அதிகாரி செல்வகுமார் பாடாலூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் ரஞ்சித், பாபு ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்ட சிறுமிக்கு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சிறுமியின் தாயை அழைத்து விசாரணை நடத்திய போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் சிறுமியை குழந்தை திருமணத்திற்கு மீண்டும் உட்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி எச்சரித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதோடு, குழந்தைகள், சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!