தமிழகத்தில் வேகமாக பரவுகிறது ‘டெங்கு’ காய்ச்சல்’ – இதுவரை 2,500 பேருக்கு சிகிச்சை..!


தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில் பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த காய்ச்சல் மேலும் பரவாமல் இருப்பதற்காக தற்போது சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை இணைந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி காய்ச்சல் சிறப்பு வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சாதாரண காய்ச்சலாக இருந்தாலும், அவர்களை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை, டாக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

காய்ச்சல் சிறப்பு வார்டில் 24 மணி நேரமும் டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். காய்ச்சல் நோயாளிகளை கையாளுவது குறித்தும், எவ்வாறு ஆய்வக பரிசோதனைகளை விரைந்து சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்தும் சுகாதாரத்துறை டாக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவமழை தொடங்குவதற்கு முன்பே கடந்த ஒரு மாதத்தில் மட்டும், டெங்கு அறிகுறிகளுடன் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பருமழை தொடங்கியதும் இந்த எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சலுக்கு நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமாகிக்கொண்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் சென்னையில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 17 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 14 குழந்தைகள் உள்பட 19 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 குழந்தைகள் உள்பட 16 பேரும், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 38 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கும், 43 குழந்தைகள் டெங்கு அறிகுறிகளுடனும் 130-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும், நோயாளிகளுக்கு டெங்கு தொற்று உள்ளதா? என ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் காய்ச்சல் வார்டில் 500-க்கு மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர், காஞ்சீபுரம், திருச்சி, கடலூர், கோவை, சேலம் என பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இதையடுத்து தமிழகம் முழுவதும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

டெங்குவை தடுக்க தமிழக அரசின் சுகாதாரத்துறை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வீட்டில் தண்ணீர் தொட்டியை திறந்து வைக்கக்கூடாது, தண்ணீர் தேங்கும் வகையில் எந்த பொருட்களும் பொது இடங்களில் வீசக்கூடாது என வீடு வீடாக சென்று விழிப்புணர்வை சுகாதாரத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலுக்கு இது வரை தமிழகத்தில் 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!