நளினியைத் தொடர்ந்து 30 நாள் பரோல் கேட்கும் ராபர்ட் பயஸ்.. எதற்காக தெரியுமா..?


மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் கேட்டு, ராஜிவ் கொலை வழக்கு கைதி ராபர்ட் பயஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ராபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை அகதியான தான், ராஜிவ் கொலை வழக்கில் 1991ல் முதல் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், கைதுக்கு பின், தன் மனைவியும், மகனும் இலங்கை சென்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் திருமண வயதை எட்டி விட்டதால், தந்தை என்ற முறையில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சிறைத்துறை டிஐஜி-க்கு அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனக்கு பரோல் வழங்க சிறைத்துறை டிஐஜி-க்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரையும் முன் கூட்டி விடுதலை செய்ய மாநில அமைச்சரவை, ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ள நிலையில், தனக்கு பரோல் வழங்கினால், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் சந்திரசேகரன் வீட்டில் தங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு குறித்து விளக்கமளிக்க 2 வார காலம் அவகாசம் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!