வயிற்றில் உள்ள கட்டியை குழந்தை என கூறி சிகிச்சையளித்த மருத்துவமனை..!


ஊத்தங்கரை அருகே வயிற்றில் கட்டி இருப்பது தெரியாமல் கர்ப்பமடைந்ததாக கூறி கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் அளித்ததாக பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சந்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி அஸ்வினி (வயது 22). இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அஸ்வினி ஓராண்டுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் கல்லாவியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று உடல்நிலை குறித்து பரிசோதனை செய்தார். அப்போது அஸ்வினி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஏழு மாதமாக கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளான தடுப்பூசி போடுதல், மாதாந்திர பரிசோதனை செய்தல், சத்து மாத்திரைகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது.

அஸ்வினி பெயரில் தனியாக தாய் மற்றும் சேய் நல காப்பகம் மூலம் அட்டை கொடுத்து அதில் வாரா வாரம் அளித்த சிகிச்சை குறித்து பதிவு செய்து வந்துள்ளனர்.

கடந்த 19-ந் தேதி மாதாந்திர பரிசோதனைக்கு சென்றபோது அஸ்வினி வயிற்று வலி இருப்பதாக மருத்துவரிடம் கூறியுள்ளார். ஆகையால் மருத்துவர் ஸ்கேன் செய்துவருமாறு கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து தர்மபுரியில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்று ஸ்கேன்செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தை ஏதும் இல்லை என்பதும், நீர்க்கட்டி இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்வினி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் வேறொரு ஸ்கேன் எடுக்கும் மையத்திற்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிலும் அஸ்வினி வயிற்றில் குழந்தை ஏதும் இல்லை என்பதும், நீர்க்கட்டி தான் இருக்கிறது என்றும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அஸ்வினி மற்றும் அவரது உறவினர்கள் கல்லாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவர்களிடம் முறையிட்டதற்கு தெரியாமல் நடந்துவிட்டது என்று அவர்கள் பதில் கூறினர்.

இதில் ஆத்திரம் அடைந்த அஸ்வினியின் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அஸ்வினி வயிற்றில் உள்ள கட்டியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். கட்டி உள்ளது என்பதுகூட தெரியாமல் கர்ப்பத்திற்கான சிகிச்சை அளித்ததால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் கூறி கதறி அழுதார்.

அரசு மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் எனக்கூறி மேலும் என்னைப்போன்ற பெண்கள் யாரும் இதுபோல் பாதிப்படையக் கூடாது என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டும் என்று அஸ்வினி மற்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை முடிந்ததும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விசாரணைக்காக ஒரு மருத்துவக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் அஸ்வினியையும், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களையும் அழைத்து விசாரணை நடத்த உள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!