ஆற்றில் பாலிடெக்னிக் மாணவர் படுகொலை : பழிக்கு பழியா?…. உடலை தோண்டி எடுத்து பரிசோதனை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தேரடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். அவருடைய மகன் முத்து என்ற அஜித்குமார் (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து 2-வது ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி சொந்த ஊருக்கு வந்துள்ளார். அன்றிரவு வெளியே சென்ற அஜித்குமார் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவருடைய தந்தை சுப்பிரமணியன், திருப்புவனம் போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அஜித்குமாரை தேடிவந்தனர். மேலும் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், மாரிக்கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசாரும் தேடி வந்தனர். ஆனாலும் அஜித்குமார் மாயமானது குறித்து சரிவர துப்பு துலங்காமல் இருந்து வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார், திருப்புவனம் பழையூரைச் சேர்ந்த திவாகர் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போதுதான், மாணவர் அஜித்குமார் கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது.

அதாவது, திவாகர் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல் கடந்த 4-ந் தேதி இரவில் திருப்புவனம் வைகை ஆற்றுக்கு அஜித்குமாரை வரவழைத்துள்ளனர். பின்னர் கத்தியால் அவரை வெட்டியதுடன், ஆத்திரம் தீராமல் கல்லை அஜித்குமாரின் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்ததும் தற்போது விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. இதையடுத்து அவரது உடலை வைகை ஆற்றில் புதைத்துள்ளனர்.

இந்த படுகொலை குறித்த தகவல் வெளியானதால் திருப்புவனத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அஜித்குமார் உடலை தோண்டி எடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கொலை நடந்து 10 நாள் ஆகிவிட்டதால், உடலை வைகை ஆற்றிலேயே பிரேத பரிசோதனை செய்வதற்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் செந்தில் தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

பிடிபட்ட திவாகர், அஜித்குமாரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். இதை தொடர்ந்து திருப்புவனம் தாசில்தார் ராஜா, பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் அங்கு தோண்டப்பட்டு, உடலை எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். மாணவர் அஜித்குமாருக்கு, ராமேசுவரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த கொலைக்கு பழிவாங்கும் வகையில் அஜித்குமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த கொலையில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.- Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.