மரத்தில் கட்டி வைத்து அக்காள் -தங்கையை தாக்கிய கும்பல் – தலைமுடியையும் அறுத்த கொடூரம்..!


ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே திருடியதாக கருதிய ஒரு கும்பல் அக்காள் மற்றும் தங்கையை மரத்தில் கட்டி, தலை முடியை அறுத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே உள்ள தாகுர் கான் பகுதியை சேர்ந்த அக்காள்-தங்கை இருவரை காய்கறி திருட வந்தவர்கள் என கருதி ஒரு கும்பல் மரத்தில் கட்டி வைத்து தாக்கினர்.

மேலும் இருவரின் தலை முடியையும் அறுத்து கொடூரமாக தாக்கினர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கும்பலிடம் இருந்து 2 பெண்களையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

போலீஸ் விசாரணையில் பாதிக்கப்பட்ட 2 பெண்களும் காய்கறி வியாபாரம் செய்து வருவது தெரியவந்தது. சம்பவத்தன்று இருவரும் உமெடன்பா பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்கி விட்டு ஆட்டோவில் வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது வழியில் திடீரென ஆட்டோவில் பழுது ஏற்பட்டு விட்டது. இதனால் வீட்டுக்கு திரும்ப முடியாத பெண்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கினர்.

மறுநாள் காய்கறிகளை விற்பதற்காக அவர்கள் ஒரு தோட்டம் வழியாக நடந்து சென்றுள்ளனர்.

அந்த நேரத்தில் தான் 2 பெண்களும் காய்கறி திருடியதாக தகவல் பரவியதும், கிராம மக்கள் திரண்டு இருவரையும் பிடித்து அடித்து தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து பெண்களை தாக்கியதாக மொத்தம் 34 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!