பெற்ற தாய் என்றும் பாராமல் குத்தி கொன்ற மகன் பரபரப்பு வாக்குமூலம்..!


செலவுக்கு பணம் தராததால் தாயை குத்தி கொன்றேன் என கைதான மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருப்பூர் மணியகாரம் பாளையம் ரோடு காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி (47). இவரது கணவர் மகேஷ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஹர்சித் (22) என்ற மகன் உள்ளனர். ஹர்சித் பிளஸ்-2 வரை படித்துள்ளார். ஆரோக்கிய மேரி மூத்த மகளுக்கு திருமணமாகி கரூர் வசித்து வருகிறார். 2-வது மகள் கோவையில் தங்கி ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிகிறார். ஆரோக்கிய மேரி தனது வீட்டின் கீழ் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். அவரிடம் ஹர்சித் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டின் மேல் மாடியில் இருந்து ஆரோக்கிய மேரி அலறும் சத்தம் வந்தது. இதனை கேட்டதும் கீழே இருந்த பனியன் நிறுவன ஊழியர்கள் மேலே சென்று பார்த்தனர். அங்கு ஆரோக்கிய மேரியின் மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அடுத்த அறையில் ஹர்சித் சோகமாக உட்கார்ந்து இருந்தார். இது குறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆரோக்கிய மேரி உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஆரோக்கிய மேரியை அவரது மகன் ஹர்சித் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

போலீசில் அவர் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-

எனக்கு 2 சகோதரிகள் உள்ளனர். மூத்த சகோதரிக்கு திருமணம் முடிந்து விட்டது. 2-வது சகோதரி கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. நான் எனது தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தேன். நேற்று மாலையும் பணம் கேட்டேன். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறினார்.

இது குறித்து கோவையில் உள்ள எனது சகோதரிக்கும் போன் செய்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து எனது சகோதரி என்னை போனில் திட்டினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் எனது தாய் எனக்கு செலவுக்கு பணம் தராமல் கதவை பூட்டி கொண்டு அறைக்கு சென்று விட்டார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த நான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்றேன்.

அங்கிருந்த எனது தாயை கத்தியால் குத்தி கொன்றேன். பின்னர் உறவினர்களுக்கு போன் செய்து அவருக்கு உடல் நிலை சரியில்லை. உடனே வாருங்கள் என்றேன். அதன்படி உறவினர்களும் அங்கு வந்தனர். அவர்கள் எனது தாய் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

செலவுக்கு பணம் தராத தாயை மகன் குத்தி கொன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!