சிரியா போரில் குடும்பத்தினரை இழந்தானா இந்த சிறுவன்? சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர். போர் காரணமாக ஏராளமான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறினர்.

இந்நிலையில், கையில் பையுடன் சிரியாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் பாலைவனத்தில் தனியாக செல்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதில் ‘4 வயதே ஆன சிறுவன் சிரியாவில் நடைபெற்று வரும் போரில் தாய் மற்றும் தங்கையை இழந்து வாடுவதாகவும், அவன் தனது தாய் மற்றும் தங்கையின் உடமைகள் அடங்கிய பையுடன் ஜோர்டானுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூக வலைதளத்தில் வைரலாகும் அந்த புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில், அது போலி என கண்டறியப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. சிரியாவில் இருந்து ஜோர்டானுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அப்போது அந்த சிறுவன் கூட்டத்தில் குடும்பத்தினரை தவறவிட்டதாகவும், பின்னர் அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் 2014-ம் ஆண்டே செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் அச்சிறுவன் குடும்பத்தினரை இழந்ததாக பரவும் தகவல் போலி என்பது உறுதியாகியுள்ளது.

இதுபோன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒருவேளை பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும்.

போலி செய்திகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.