`குண்டுவீச்சில் தப்பிய சில மணிநேரத்தில்..!’ – தாயைப் பார்க்க வந்த ரவுடிக்கு நேர்ந்த சோகம்

புதுச்சேரி, வாணரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி குமார் (எ) சாணிக்குமார். குடி போதையில் அடிக்கடி சாணியில் விழுந்து கிடந்ததால் இவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது என்கின்றனர் காவல்துறையினர். இவர் மீது 1998-ம் ஆண்டு முதலியார்பேட்டை மற்றும் ஒதியஞ்சாலைப் பகுதிகளில் தனித்தனி கொலை வழக்குகள், 2007-ம் கொலை முயற்சி வழக்கு, 2009-ம் ஆண்டு கும்பலாக கொலைவெறித் தாக்குதல் நடத்தியது, 2010-ம் ஆண்டு காலாப்பட்டில் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட வழக்குகள், 2016-ம் ஆண்டு புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ராஜவேலு உறவினர் வீடு மற்றும் முதலியார்பேட்டை காவல் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வீசியது உள்ளிட்ட 8 வழக்குகள் சாணிக்குமார் மீது உள்ளன. 1998-ம் ஆண்டு செய்த ஒரு கொலைக்கான ஆயுள் தண்டனை முடிந்து கடந்த ஆண்டு விடுதலையான இவர் மீது 7 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

ரவுடி குமார் (எ) சாணிக்குமார்
தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்து வெளி மாநிலங்களிலேயே தங்க ஆரம்பித்த இவர், தனது தாய் ஜெயாவைப் பார்க்க மட்டும் அடிக்கடி புதுச்சேரி வந்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் புதுச்சேரியிலேயே முகாமிடத் தொடங்கினார். இந்நிலையில் வாணரப்பேட்டை பகுதியில் நடந்து கொண்டிருக்கும் எல்லைக் காளியம்மன் கோயில் திருவிழாவின் நேற்றைய உபயத்தை ரவுடி சாணிக்குமார் செய்திருக்கிறார். அதனால் இன்றைய உபயதாரர் சாணிக்குமர் என்று கோயில் தகவல் பலகையில் எழுதியிருந்ததோடு, அதை ஒலிபெருக்கியிலும் தெரிவித்திருக்கின்றனர்.

இரவு “உபயதாரர் சாணிக்குமார் எங்கிருந்தாலும் கோயிலுக்கு வரவும்” என்று அழைத்திருக்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர். அதையடுத்து அதில் கலந்துகொள்ள சென்றிருக்கிறார் ரவுடி சாணிக்குமார். ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அங்கு திரண்டிருந்தனர். திடீரென்று முகமூடி அணிந்துகொண்டு அங்கு வந்த கும்பல் சாணிக்குமார் மீது வெடிகுண்டை வீசியது. ஆனால் அது குறி தவறி கோயில் சுவரின் மீது பட்டு வெடித்தது. பயங்கரச் சத்தத்துடன் வெடித்ததால் அலறியடித்துக்கொண்டு மக்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். விழாவில் பங்கேற்ற ஒருவர் லேசான காயமடைந்த நிலையில், அங்கு பதற்றம் ஏற்படவே வெடிகுண்டு வீசிய மர்மக் கும்பல் தலைமறைவானது. இது குறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

ரவுடி குமார் (எ) சாணிக்குமார்
பின்னர் அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் குண்டு வீசப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் வாணரப்பேட்டை காளியம்மன் கோயில் வீதி 2வது குறுக்குத் தெருவில் வசிக்கும் பிரபல ரவுடியான சாணிக்குமாரைத் தீர்த்துக் கட்ட மர்மக் கும்பல் அவர் மீது வெடிகுண்டு வீசியதைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து ரவுடி சாணிக்குமார் உயிருக்குப் பயந்து தப்பித்திருக்கலாம் என்று நினைத்த காவல்துறையினர், பன்னீர்செல்வம் (63) என்பவரிடம் புகாரைப் பெற்று ஆயுதங்களுடன் கும்பலாக கூடுதல், கொலை முயற்சியில் ஈடுபடுதல், வெடிகுண்டு வைத்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் வெடிகுண்டு வீசப்பட்ட இடத்திலிருந்து சில மீட்டர் தூரத்திலேயே நேற்று காலை தலை சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார் ரவுடி சாணிக்குமார். வெடிகுண்டு வீச்சில் தப்பிய அவரை, அடுத்த சிலமணி நேரங்களிலேயே அப்பகுதியில் மடக்கி சரமாரி வெட்டி கொலை செய்திருக்கிறது அந்த மர்மக் கும்பல்.

சாணிக்குமார் தலைப்பகுதி சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வெடிகுண்டு வீச்சிலிருந்து தப்பிய ரவுடியை அக்கும்பல் இரண்டு தெருக்கள் தாண்டி மடக்கி முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசி தலையில் கத்தியால் வெட்டி கொலை செய்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. அவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் மிளகாய்ப் பொடி, தொப்பி, சங்கிலிகள் உள்ளிட்டவை கிடந்தன. அதை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

வெடிகுண்டு வீசிய இடத்தை மட்டும் முதலியார்பேட்டை போலீஸ் அதிகாரிகள் பார்த்து விட்டு அலட்சியமாக இருந்ததால் கொலையை அவர்களால் தடுக்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சுதாரிப்புடன் செயல்பட்டு வாணரப்பேட்டைமுழுவதும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி இருந்தால் சாணிக்குமாரின் கொலையைத் தடுத்திருக்கலாம். அது மட்டுமன்றி வெடிகுண்டு வீசிய கும்பலையும் உடனே மடக்கிப் பிடித்திருக்கலாம் என்று கொதிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.- Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.