பாட்டுப்பாடி பிச்சை எடுத்த பெண்ணுக்கு வீடு வாங்கி கொடுத்த நடிகர் – பாலிவுட்டில் குவியும் வாய்ப்பு


ரயில் நிலையத்தில் பாட்டுப்பாடி பிச்சை எடுத்த பெண்ணுக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரனகத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டல் என்ற பெண், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றைப் பாடி உள்ளார். அவரின் பாடலைக் கேட்டதும் மெய் சிலிர்த்துபோன ஒருவர், அதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிய அந்த வீடியோவை பார்த்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ரனு மண்டலை சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைகள் செய்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை அளித்துள்ளது. அப்போது ரனு மண்டல் பாடியதை கேட்ட அந்நிகழ்ச்சியின் நடுவரும், இசை அமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பளித்துள்ளார்.

ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டலின் பாடும் திறனை உலகறியச் செய்த ஹிமேஷ் ரேஷ்மியாவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் ஹிமேஷ் ரேஷ்மியாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

ரனு மண்டலுக்கு ரூ.55 லட்சம் மதிப்பிலான வீடு ஒன்றை பாலிவுட் நடிகர் சல்மான் கான் பரிசாக அளித்துள்ளதாகவும், மேலும் அவர் அடுத்ததாக நடித்துவரும் தபங் 3 படத்தில் ரனு மண்டலுக்கு பாட வாய்ப்பளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!