ஆற்றில் இறங்கிய காதல் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்! தாமிரபரணியில் பரிதாபம்!


நெல்லையில் காதலனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆற்றில் மூழ்கி காதலர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பாளை முருகன்குறிச்சியை சேர்ந்தவர் வீரபெருமாள். இவருடைய மகள் வனிதா (வயது 20). இவர் பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார். பாளை செந்தில் நகரை சேர்ந்த இசக்கி மகன் சங்கரநயினார் (21). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரது குடும்பத்தினர்களும் உறவினர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

சங்கரநயினார் ஓசூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். வனிதாவுக்கு அடுத்த ஆண்டு கல்லூரி படிப்பு முடிந்ததும், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் முடிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கரநயினாருக்கு பிறந்த நாள். இதனால் அவர் விடுமுறை எடுத்து கொண்டு காதலி வனிதாவை சந்திக்க நெல்லை வந்தார்.

நேற்று காதலர்கள் இருவரும் மொபட்டில் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். மதியம் ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். பிற்பகல் தாமிரபரணி ஆற்றில் குளித்து மகிழ்வதற்காக 4 வழிச்சாலை ரோடு வழியாக அருகன்குளம் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றனர். அங்கு இருவரும் குளித்தனர்.

அப்போது வனிதா எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அவரை சங்கரநயினார் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

இதை பார்த்து அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற வந்தனர். ஆனால் அதற்குள் வனிதா, சங்கரநயினார் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளை தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி வனிதா, சங்கரநயினார் ஆகியோரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் பற்றி தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆற்றில் மூழ்கி காதலர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!