வேளாண் கல்லூரி மாணவர் தற்கொலை… கோவையில் பரபரப்பு..!


கோவையில் நேபாளம் நாட்டைச் சேர்ந்த வேளாண் கல்லூரி மாணவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேபாளத்தை சேர்ந்தவர் பிபோநாத் நியூபன். இவரது மகன் சந்தோஷ் நியூபன் (வயது 26). இவர் கோவை வேளாண்மை பல்கலை கழகத்தில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இதற்காக அவர் பல்கலைகழக வளாகத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

நேற்று இரவு விடுதி மாணவர்கள் வழக்கம் போல சாப்பிட்டு விட்டு அவரவர் அறைக்கு சென்று தூங்க சென்றனர். சந்தோஷ் நியூபனும் அவர் தங்கி இருந்த அறைக்கு தூங்க சென்றார்.

திடீரென நள்ளிரவு 1.30 மணியளவில் சந்தோஷ் நியூபன் தான் தங்கி இருந்த அறையில் உள்ள ஜன்னலில் துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நள்ளிரவு நீண்ட நேரமாக அவரது அறையில் லைட் எரிந்து கொண்டு இருந்ததை பார்த்த பக்கத்து அறையை சேர்ந்த மாணவர் சந்தோஷ் நியூபன்னின் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து விடுதி வார்டன் கணேசனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனடியாக பல்கலைகழக விடுதிக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் தற்கொலை செய்து கொண்ட சந்தோஷ் நியூபன்னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேபாள நாட்டு மாணவர் சந்தோஷ் நியூபன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!