மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேச்சு.. முகம் சுளிக்க வைத்த திமுக எம்எல்ஏ


அரசு பள்ளி விழாவில், மாணவிகள் முன்னிலையிலேயே முதலிரவு சமாச்சாரத்தை பற்றி பேசி உள்ளார் திமுக எம்எல்ஏ புகழேந்தி. இப்படி பேசியது, மாணவிகளை மட்டுமல்லாது ஆசிரியர்களையும், அங்கு கூடியிருந்த ஊர் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதுடன், முகம் சுளிக்கவும் வைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், திமுக எம்எல்ஏ புகழேந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற பின் அதற்கான சான்றிதழ் பெற்ற இடம் இந்த பள்ளிக்கூடம் தான்.ஒரு பெண்ணை பொறுத்தவரை ஆயிரம் இரவுகளை சந்தித்தாலும் வாழ்வின் கடைசி காலத்திலும் அவர் நினைத்து நினைத்து பார்ப்பது முதலிரவு என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை ஆயிரம் நிகழ்வுகளில் நாம் சந்தித்தாலும் சட்டசபை உறுப்பினர் அங்கீகாரம் இப்பள்ளியில் இருந்து வழங்கப்பட்டது என்னால் மறக்க முடியாது” என்றார்.

எம்எல்ஏ இப்படி பேசியது பெண்கள் மேல்நிலை பள்ளியில்.. அதுவும் மாணவிகள், ஆசிரியர்கள் முன்னிலையிலேயே இப்படி பேசியதும் கூடியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புகழேந்தியின் இந்த பேச்சுக்கு காஞ்சிபுரம் முன்னாள் எம்பி மரகதம் உடனே எதிர்ப்பு தெரிவித்தார். ”பள்ளி சம்பந்தமாக மட்டும் பேசுங்கள்” என்றார். இதனால் எம்எல்ஏவுக்கும் மரகதத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!