அரசு விடுதியில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் சாவு.. இரும்பு கொடி கம்பத்தால் நடந்த பரிதாபம்..!


கொப்பலில் அரசு விடுதியில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் நடந்துள்ளது. தேசியக்கொடி ஏற்றிய இரும்பு கம்பத்தை மாடிக்கு கொண்டு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

கொப்பல் டவுனில் பள்ளி மாணவர்களுக்கான தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியை அரசு நடத்தி வருகிறது. அங்கு கொப்பல் டவுன், புறநகர், பிற கிராமங்களை சேர்ந்த 65 மாணவர்கள் தங்கி இருந்து, அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம்(சனிக்கிழமை) மற்றும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பள்ளிக்கு விடுமுறை என்பதால் விடுதியில் தங்கி இருந்த 40 மாணவர்கள் தங்களது ஊர்களுக்கு சென்றிருந்தனர். இதனால் 25 மாணவர்கள் மட்டுமே விடுதியில் தங்கி இருந்தனர்.

அரசுக்கு சொந்தமான விடுதியாக இருந்தாலும், அது தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. கடந்த 15-ந் தேதி சுதந்திர தினத்திற்காக தேசிய கொடி ஏற்ற விடுதியின் வளாகத்தில் தற்காலிகமாக குழி தோண்டி, அதில் ஒரு இரும்பு குழாய் அமைத்து தேசிய கொடியை ஏற்றி மாணவர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர். சுதந்திர தினம் முடிந்து 2 நாட்கள் ஆனதால், தேசிய கொடியை அவிழ்க்கவும், இரும்பு குழாயை விடுதியின் மாடியில் வைக்கும்படியும் மாணவர்களிடம் வார்டன் பசவராஜ் கூறி இருந்தார்.

இதையடுத்து, நேற்று காலை 8 மணியளவில் தேசிய கொடியை அவிழ்த்துவிட்டு இரும்பு குழாயை விடுதியின் மாடிக்கு மாணவர்கள் தூக்கி சென்றனர். அப்போது மாடியின் வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பியின் மீது இரும்பு குழாய் உரசியது. இதன் காரணமாக இரும்பு குழாய் வழியாக மின்சாரம் பாய்ந்து, அதனை தூக்கி சென்ற 5 மாணவர்களையும் தாக்கியது. இதனால் 5 மாணவர்களின் உடல்களிலும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்கள்.

இதை பார்த்து சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுபற்றி உடனடியாக வார்டன் பசவராஜிக்கு மாணவர்கள் தகவல் கொடுத்தனர். அதே நேரத்தில் தகவல் அறிந்ததும் கொப்பல் டவுன் போலீசார் விரைந்து வந்து 5 மாணவர்களின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். தகவல் அறிந்ததும் கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரேணுகா சுகுமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பலியான மாணவர்கள் மேடகல் கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன் (வயது 15), லிங்கதஹள்ளி கிராமத்தை சேர்ந்த பசவராஜ் (16), கெலகேரி கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (14), ஹைதர் நகரை சேர்ந்த குமார்(14) மற்றும் லாடனகேரி கிராமத்தை சேர்ந்த கணேஷ்(14) என்று தெரியவந்தது. இவர்களில் மல்லிகார்ஜுன், பசவராஜ் 10-ம் வகுப்பும், தேவராஜ், குமார் 9-ம் வகுப்பும், கணேஷ் 8-ம் வகுப்பும் படித்து வந்தது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் இரும்பு குழாயை மாணவர்கள் தூக்கி சென்ற போது விடுதி வார்டன் பசவராஜ் அங்கு இல்லை என்பதும், அவரது அலட்சியம் மற்றும் கவனக்குறைவு காரணமாக மாணவர்கள் உயிர் இழந்திருப்பதும் தெரியவந்தது.

இதற்கிடையில், மின்சாரம் தாக்கி மாணவர்கள் பலியாகி இருப்பது பற்றி அறிந்ததும், அவர்களது பெற்றோர் விடுதிக்கு பதறி அடித்தபடி ஓடிவந்தனர். அவர்கள் தங்களது மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. அதே நேரத்தில் விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை வார்டன் பசவராஜ் வேலை வாங்கியதாலும், அவரது அலட்சியத்தாலும் தான் இந்த துயர சம்பவம் நடந்திருப்பதாக மாணவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள். பின்னர் 5 மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மாணவர்கள் பலியானது பற்றி அறிந்ததும் கொப்பல் மாவட்ட கலெக்டர் சுனில்குமார் தங்கும் விடுதிக்கும் விரைந்து வந்தார். பின்னர் அவர், சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டார். மேலும் மாணவர்கள் பலியானது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரேணுகா சுகுமாருக்கு, மாவட்ட கலெக்டர் சுனில்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கொப்பல் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் விடுதி வார்டனான பசவராஜை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பலியான சம்பவம் கொப்பலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!