உயிரைக் காப்பாற்ற கையில் கிடைத்த பொருட்களை திருடர்கள் மீது வீசியெறிந்த தம்பதி..!


வீட்டுக்குள் நுழைந்துவிட்ட கொள்ளைக்காரங்களை கண்டு செந்தாமரை பயப்படவே இல்லையே.. செருப்பு, பக்கெட்.. பிளாஸ்டிக் சேர்களை தூக்கி வீசியெறிந்தே அவர்களை துணிச்சலுடன் விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி சண்முகவேல். செந்தாமரை. வயதான இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள். இவர்கள் 3 பேருமே வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.

ஒரு ஏக்கரில் அமைந்துள்ள தோட்டத்தில் இவர்களது வீடு கட்டப்பட்டுள்ளது. அதனால் இங்குதான் இந்த தம்பதி வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், சண்முகவேல் வீட்டில் செல்போனை பார்த்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 2 கொள்ளையர்கள் வீட்டிற்குள் வந்துவிட்டனர். இருவருமே கர்சீப்பால் முகத்தை கட்டி வந்திருந்தனர். அதில் ஒருவர், திடீரென சண்முகவேல் பின்பக்கமாக வந்து கழுத்தை துணியால் இறுக்கி சுற்றி கொலை செய்த முயற்சித்தார்.

அப்போது இன்னொருவர் சண்முகவேல் அருகில் வெட்ட வருகிறார். கழுத்தை இறுக்கியதில் சண்முகவேல் அலறி சத்தம் போடவும், உள்ளிருந்து செந்தாமரை வந்துவிட்டார். இதை பார்த்து பதறிய அவர், கீழே கிடந்த செருப்பு, பிளாஸ்டிக் சேர், பக்கெட் போன்றவற்றை எடுத்து அந்த கொள்ளையர்கள் மீது வீசினார். இன்னும் என்னென்ன கையில் கிடைத்ததோ அதை எல்லாம் எடுத்து அவர்கள் முகத்தில் தூக்கி அடித்து துணிச்சலுடன் விரட்டினார்.

இதில் பொருட்கள் மேலே விழுந்ததும் நிலைதடுமாறினர் கொள்ளையர். இந்த சமயத்தில் சுதாரித்துக் கொண்ட சண்முகவேலுவும், அவர்களின் பிடியிலிருந்து விலகி வந்து தன் பங்குக்கு சேர்களை தூக்கி அடிக்கிறார். இதை கொஞ்சமும் கொள்ளையர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் கொலை செய்யும் முயற்சியை விட்டுவிட்டு, செந்தாமரை அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

வயதான இந்த தம்பதிகளின் உயிருக்கு ஆபத்துஏதும் இல்லை.. என்றாலும் இவர்கள் யாரு? கொள்ளைதான் அடிக்க வந்தார்களா? அல்லது கொலை செய்ய வந்தார்களா என்று தெரியவில்லை. விஷயத்தை போலீசில் சொல்லவும், அவர்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!