மின்சாரம் தாக்கியதில் அலறி துடித்த மனைவி… காப்பாற்ற ஓடிச் சென்ற கணவனும் மரணம்..!


திருச்சி அருகே காயப்போட்ட துணியை எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பிள்ளையார்கோவில்பட்டி அருகே உள்ள சித்தம்பட்டியை சேர்ந்தவர் தர்மன் (வயது 30). டிரைவர். இவரது மனைவி ஜான்சிராணி (25). பி.எட். படித்துள்ளார். இவர்களது வீட்டின் அருகே துணி காயப்போடுவதற்காக கம்பியால் கொடிகட்டி உள்ளனர். நேற்று காற்று அதிவேகமாக வீசியதால், அந்த வழியாக அமைக்கப்பட்டிருந்த மின்வயர் கொடி கம்பி மீது உரசியுள்ளது.

இதை அறியாமல் அங்கு காயப்போட்ட துணியை ஜான்சிராணி எடுத்தார். அப்போது, அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அலறி துடித்த அவரை தர்மன் காப்பாற்ற சென்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கணவன்-மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!