சிறையிலிருந்து மகளைப் போல மாறி தப்ப முயன்ற கைதி -மடக்கி பிடித்த போலீஸ்..!


பிரேசில் நாட்டில் சிறை கைதி ஒருவர், தன் மகளைப் போல மாஸ்க் அணிந்து வேடமிட்டு தப்ப முயன்றுள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.

சிறையில் இருக்கும் கைதிகள் தப்பிப்பதற்காக பல்வேறு முறைகளில் செயல்படுவர். ஆனால், போலீசாரின் 24 மணி நேர கண்காணிப்பில் இருக்கும் அவர்களால், அவ்வளவு எளிதாக தப்பிவிட முடியாது.

அப்படியொரு கைதி, பிரேசில் நாட்டு சிறையில் இருந்து தப்பிக்க புதிய முறையை கையாண்டிருக்கிறார். பிரேசில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் கிளாவினோ டா சில்வா. இவர் ஒரு கேங் லீடர் ஆவார்.

அந்த கைதிக்கு 19 வயதில் மகள் உள்ளார். சில்வாவை அவரது மகள் சந்திக்க வருவது வழக்கம். அப்படி ஒரு நாள் , அவரது மகள் பார்க்க வந்துள்ளார். ஆனால், அவரது தந்தை ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

வந்த மகளை சிறையிலேயே விட்டுவிட்டு, திட்டமிட்டபடி அவளைப் போலவே, உடை, மாஸ்க் மற்றும் விக் என அனைத்தையும் தயாராக வைத்துள்ளார். மகளை சிறையிலேயே விட்டுவிட்டு தப்பிக்க முடிவெடுத்தார்.

ஆனால், போலீசார் அவரது செயல்களையும், மகளின் நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து வந்துள்ளனர். திடீரென மகளை விடுத்து அவர் வைத்திருந்தவைகளை மறைவாக சென்று அணிந்துக் கொண்டு கிளம்ப முற்பட்டுள்ளார்.

போலீசார் முழுவதுமாக மகளைப்போலவே மாறிய கைதியை மடக்கி பிடித்தனர். வேஷம் கலைக்கப்படும்போது போலீசார் வீடியோவும் எடுத்துள்ளனர்.

மேலும் அன்று காலை முதல் பதற்றத்துடன் கைதி செயல்பட்டதே அவர் மாட்ட காரணமானது எனவும், அதிக பாதுகாப்பு உள்ள தனிச்சிறையில் சில்வாவை மாற்ற உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!