தேவைக்கு அதிகமாக மருந்து உட்கொண்டதால் ராபர்ட் கென்னடி பேத்தி மரணம்


அமெரிக்காவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் ராபர்ட் கென்னடியின், பேத்தி சயோரிஸ் தேவைக்கு அதிகமாக மருந்து உட்கொண்டதால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாகாணத்துக்கு உட்பட்ட ஹையானிஸ் பகுதியில் சயோரிஸ் கென்னடி ஹில், குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று அவருக்கு உடல் நலம் பாதித்ததாக கூறி, கென்னடி குடும்பத்தினர் அங்குள்ள கேப் கோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சயோரிஸ் மரணத்தை உறுதி செய்துள்ள கென்னடி குடும்பத்தினர், அவரது இழப்பு தங்களை நிலைக்குலைய செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் சயோரிஸின் பாட்டியான ஈதல் கென்னடியும் பேத்தியின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 22 வயதேயான சயோரிஸின் திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சயோரிஸ் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அவர் அதிகப்படியாக மருந்துகளை எடுத்துக்கொண்டதன் காரணமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

போஸ்டன் கல்லூரியில் தொலைத்தொடர்பு படித்து வந்த அவர், ஜனநாயக மாணவர் அமைப்பின் துணைத் தலைவர் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!