கேரளாவில் காங்கிரஸ் இளைஞரணி செயலாளராக இருந்தவர் நவுசாத் (வயது 44). அந்த பகுதியின் உள்ளூர் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். அவரை சவக்காடு பகுதியில் புன்னா என்ற இடத்தில் வைத்து முகமூடி அணிந்த 18 பேர் கொண்ட கும்பல் ஒன்று நேற்று மாலை தாக்கியது.
இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடன் இருந்த 3 பேரும் காயம் அடைந்தனர். இதன்பின் அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலில் இந்திய சமூக ஜனநாயக கட்சி தொண்டர்கள் ஈடுபட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை நவுசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமசந்திரன் உள்ளிட்டோர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இது அரசியல் படுகொலை என கூறியுள்ள ராமசந்திரன், குற்றவாளி எவ்வளவு அதிகாரம் மற்றும் வசதி படைத்தவராக இருப்பினும் அவரை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு எதிராக குருவாயூர் நகரில் இன்று பந்த் நடைபெற்றது.-Source: dailythanthi
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!