கல்லூரி அட்மி‌ஷனுக்கான விண்ணப்பம் பெறுவதற்கு ரெயிலில் சென்ற மாணவிகளுக்கு நேர்ந்த துயரம்…!


டிக்கெட் இன்றி பயணம் செய்த மாணவியை மானபங்கம் செய்ததாக 3 டிக்கெட் பரிசோதகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தானே மாவட்டம் உல்லாஸ்நகரை சேர்ந்த 17 மாணவி ஒருவர், கடந்த ஜூலை மாதம் மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் அட்மி‌ஷனுக்கான விண்ணப்பம் பெறுவதற்காக மின்சார ரெயிலில் தனது தோழி ஒருவருடன் வந்திருந்தார்.

சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் வந்திறங்கிய அவர்களிடம், அங்கு பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர்கள் சந்தீப்(வயது29), ராமசந்திரா(52), பிக்டோ சிங்(25) ஆகிய மூன்று பேர் டிக்கெட்டை காண்பிக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர்களிடம் டிக்கெட் இல்லை.

இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர்கள் மூவரும் அவர்களை 4 மணி நேரம் சிறைபிடித்து வைத்ததாகவும், கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும், இதில், ஒரு மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவி சி.எஸ்.எம்.டி. ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகார் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தற்போது 5 மாதத்திற்கு பிறகு போலீசார் டிக்கெட் பரிசோதகர்கள் 3 பேர் மீதும் மானபங்க பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். – Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!