கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ‘சரவணபவன்’ ராஜகோபால் நேற்று மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரில் நடைபெறுகிறது.
புகழ்பெற்ற ‘சரவணபவன்’ ஓட்டல் அதிபர் ராஜகோபால் (வயது 72). இவர் தனது ஓட்டலில் வேலை பார்க்கும் ஊழியரின் மகள் ஜீவஜோதி என்பவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். இதுதொடர்பான பிரச்சினையில் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் அடித்து கொலை செய்யப்பட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ராஜகோபால் மற்றும் அவரது கூட்டாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டும் சமீபத்தில் தண்டனையை உறுதிபடுத்தியது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி கடந்த மார்ச் 9-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள செசன்சு கோர்ட்டில் ஆம்புலன்சு வேனில் படுத்த நிலையிலேயே ராஜகோபால் சரணடைந்தார். ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஐகோர்ட்டு அறிவுறுத்தலின்பேரில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியிலும், அதனைத்தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் ராஜகோபால் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த ராஜகோபாலின் உடல்நிலை நேற்று காலை மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும், சிகிச்சை பலனின்றி காலை 10.30 மணிக்கு ராஜகோபால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரி வளாகம் முன்பு ராஜகோபாலின் குடும்பத்தினரும், உறவினர்களும் கூடினர்.
வழக்கமாக அரசு ஆஸ்பத்திரிகளில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தோரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுவது கிடையாது. ஆனால் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த ராஜகோபால், தண்டனை அனுபவிக்காமல் அதாவது சிறைக்கு செல்லாமலேயே உயிரிழந்துள்ளதால், சிறைச்சாலை சட்ட விதிகளின்படி ராஜகோபால் உடலை பிரேத பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பிற்பகலில் வடபழனி தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து ராஜகோபாலின் உடல் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாலை பொன்னேரி மாஜிஸ்திரேட்டு சதீஷ்குமார் முன்னிலையில் ராஜகோபாலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் இரவு 8 மணி வரை மாஜிஸ்திரேட்டு வராததால், பிரேத பரிசோதனை நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் மறுநாள் (இன்று) பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) ராஜகோபால் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதனைத்தொடர்ந்து அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான புன்னைநகருக்கு ராஜகோபாலின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.-Source: dailythanthi
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!