வனிதா எலிமினேட் செய்யப்பட்டதற்கு போலீஸ் விசாரணை தான் காரணமா..?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த வனிதா விஜயகுமார் எலிமினேட் செய்யப்பட்டதை குறித்து பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், அவருடைய வெளியேற்றத்திற்கு போலீசாரின் விசாரணை தான் காரணம் என தயாரிப்புக் குழு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தொலைக்காட்சி பார்வையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் சீசன் 3, கடந்த ஜூன் 23ம் தேதி தொடங்கியது. எதிர்பார்க்காத பல பிரபலங்கள் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பிரபலங்கள் என 15 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். மிகவும் குதூகலமாகவும், உற்சாகத்துடனும் போட்டியாளர்கள் இருந்து வந்தனர்.

நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு நாட்கள் கழித்து பிரபல மாடல் மீரா மிதூன் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரவேசித்தார். இவருடைய வருகை அபிராமி, சாக்‌ஷி, வனிதா உள்ளிட்ட போட்டியாளர்களை எரிச்சலூட்டியது. இதனால் சண்டை சச்சரவுகள் உருவாகத் தொடங்கின.

பிக்பாஸ் வீட்டுக்குள் எப்போது சண்டை நடந்தாலும் வனிதாவின் குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்கும். இதனால் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. டிஆர்பி-யும் அள்ளியது. வனிதாவை திட்டிக்கொண்டே பலரும் நிகழ்ச்சியை பார்க்க துவங்கினர்.

இதற்கிடையில் வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக போலீசார் அவரிடம் விசாரித்தனர். அது சுமூகமாக முடிந்தது. அதை தொடர்ந்து கடந்த 7ம் தேதி நடந்த எலிமினேஷனில் ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.

பிறகு அவ்வப்போது மீரா மிதூனால் பிரச்னை ஏற்படுவதும், அதற்கு சமரசம் செய்கிறேன் என்ற நிலையில் வனிதா கத்துவதுமாக பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து அமளிகள் உருவாகி வந்தன. இதனால் பார்வையாளரள் மத்தியில் வனிதா மீது அதிருப்தி எழுந்தது.

மேலும், அவர் எலிமினேஷனுக்கும் பரிந்துரை செய்யபப்ட்டார். அப்போது எழுந்த அதிருப்தியை மக்கள் வாக்குகளாக மாற்றினார். இதனால் கடந்த 14ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். இது வனிதாவுக்கே பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

அதுவரை வனிதா எப்போது வெளியேறுவார் என்று காத்திருந்த மக்கள், அவர் எலிமினேட் ஆனவுடன் அவருக்கு ஆதரவு காட்டி வருகின்றனர். மேலும் சிலர் வனிதாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், பிக்பாஸ் வீட்டை விட்டு வனிதா சென்ற நாள் முதல், அவருடைய இடத்தை பிடிக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். அதில் முதல் ஆளாக இருக்கிறார் மீரா மிதூன்.

ஆனால் விஷயம் அதுவல்ல, வாக்கெடுப்பு காரணமாகத்தான் வனிதா வெளியேற்றப்பட்டார் என்று நம்பப்பட்டது. ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் போலீசார் விசாரணை நடத்தியதாலும், மேலும அவருடைய முன்னாள் கணவர் இதுதொடர்பாக பிரச்னை செய்யலாம் என்ற காரணத்தினால் அவரை நிகழ்ச்சிக் குழு வெளியேற்றிவிட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்த் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்கிடையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு வனிதாவால் கிடைத்து வந்த டி.ஆர்.பி குறைந்துவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும், இதுகுறித்து முழு விபரங்கள் அடுத்த வாரம் வியாழன்று தான் தெரியவரும்.

இந்த சூழ்நிலையில், வனிதாவுக்கு மாற்றாக புதிய போட்டியாளரை நிகழ்ச்சிக் குழு தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பிக்பாஸ் பணியாளர்களிடம் விசாரித்த போது, அந்த புதிய போட்டியாளர் விசித்திரா என்றும், அடுத்த வாரம் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வரலாம் என தெரிவித்தனர்.- Source: samayam


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.